பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, July 31, 2011
Friday, July 29, 2011
ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக்கான எடியூரப்பா
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த எடியூரப்பா இன்று பிஜேபிக்கு ஒரு அவமான சின்னமாக விளங்குகிறார். அ.ராசா செய்த ஊழலை காட்டிலும் இவர் செய்த ஊழல் மிக மோசம். ராசா திமுகவிலிரிந்து வந்தவர் ஊழல் செய்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் இவரோ ஆர்.எஸ்.எஸ் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.
ரொம்ப நாள் கழித்து பிஜேபி தென் இந்தியாவில் அடியெடித்து வைத்தது. ஒழுங்காக ஆட்சி அமைக்க வேண்டியவர் தற்போது காங்கிரஸே தேவலாம் என்று சொல்லும் அளவிற்கு லூட்டி அடித்திருக்கிறார்.
கர்நாடகத்தில் சிலகாலமாக நடந்து கொண்டிருந்த கூத்து ஒருவழியாக முடிவுக்கு வரும்போல் தெரிகிறது. தன் ராஜிநாமாவிற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார், நிச்சயம் பி.ஜேபியை இரண்டாக உடைத்துவிடுவார் என்று நம்புகிறேன். பாவம் அத்வானி பாகிஸ்தான் தீவரவாதிகளையும், மன்மோகன் சிங் என்ற சாதுவையும் தான் மைக் பிடித்து விளாசுவார் ஆனால் எடியூரப்பா போன்றவர்களை கை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பார்.
சில நாட்களுக்கு முன், முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான கர்நாடக லோகாயுக்தா அமைப்பு, கர்நாடக அரசில் சுரங்கத் தொழிலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்வர்களான குமாரஸ்வாமி, தரம்சிங், மற்றும் தற்போதைய முதல்வர் எதியூரப்பா ஆகியோர்கள் தவறிழைத்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரெட்டி சகோதரர்கள் கோலோச்சிய சுரங்கத்துறையில் பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருப்பினும், முதல்வர் எதியூரப்பா பதவி விலகவில்லை; விலகும்படியாக வற்புறுத்தப்படவும் இல்லை. காரணம், அவர் சார்ந்திருந்த லிங்காயத்து சமூகத்தின் ஓட்டுக்கள் மற்றும் கட்சி மேலிடத்திலேயே அவருக்கு சுஷ்மா ஸ்வராஜ் போன்ற இரண்டாம்கட்டத் தலைவர்களிடமிருந்த செல்வாக்கு. ஆனால் தற்போது ஊழலுக்கெதிரான போராட்டம் என்பதைக் கையிலெடுத்திருக்கும் பாஜகவுக்கு, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதியூரப்பாவைப் பதவியில் வைத்துக் கொண்டே போராட்டம் நடத்துவதென்பது, மடியில் பூனையைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக இருந்து வந்தது.
இந்நிலையில் சென்ற வியாழக் கிழமையன்று இது தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூடி விவாதம் செய்தது. ஏற்கனவே எதியூரப்பா தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்திருந்தாலும், அவையெல்லாம் திமுக செயற்குழு போலவே எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல், வெண்டைக்காய் ரசவாங்கி போலவே முடிந்திருந்தன.
ஆனால் இம்முறை, பாஜக உறுப்பினர்கள் பலர் எதியூரப்பா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கட்சித் தலைவர் நிதின் கட்கரியிடம் முறையிட்டதால், இப்பொழுது முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமென பாஜக மேலிடத்திலிருந்து எதியூரப்பாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், எதியூரப்பாவும் அதற்கிணங்கி ராஜிநாமாவை ஆளுனர் பரத்வாஜிடம் இவ்வாரம் அளிப்பாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாற்றாக கர்நாடக பாஜகவின் தலைமைப் பதவியை எதியூரப்பா எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சிதம்பரம், மன்மோகன் சிங்கை கேள்வி கேட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தற்போது எடியூரப்பாவை பதவி விலக அவர் காலில் விழுந்து கேட்டுக்கொண்டுள்ளது. எடியூரப்பா ஊழல் செய்திருந்தாலும், இதுவும்தேச துரோகமே!
நம்மால் செய்ய முடிந்தது ஒரு நடை திருப்பதிக்கு போய்விட்டு வரலாம். எடியூரப்பாவும் அதை தான் செய்கிறார்.
Posted by IdlyVadai at 7/29/2011 04:28:00 PM 10 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Thursday, July 28, 2011
டாப் 5 + 1
தற்போதைய டாப் 5+1 திரைப்படங்கள், சில படங்கள் இனிமேல் தான் ரிலீஸ் ஆக போகிறது.





கஜினி-2 - மறதி போய் இப்போ நெஞ்சு வலியாம், அடுத்து ? :-)
Posted by IdlyVadai at 7/28/2011 09:46:00 PM 17 comments Links to this post
Labels: நகைச்சுவை
Sunday, July 24, 2011
வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்
செயற்குழு கூட்டத்தில் பேசிய கருணாநிதி பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார். பூஜ்யத்திலிருந்து மைனஸ் பக்கம் தி.மு.க போனால் தமிழ்நாட்டுக்கு நல்லது.
இன்று கலைஞர் டிவியில் மூன்று பேப்பரை வைத்துக்கொண்டு பரபர என்று உப்பு சப்பு இல்லாத தீர்மானங்களை ஒரு பத்திரிக்கை நிருபர் படித்துக்கொண்டு இருந்தார். இன்றைய கூட்டத்தில் வெளிவராத தீர்மானங்கள் கீழே...
1. 'அண்ணா' உருவாக்கிய லோக்பாலில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்.
2. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி எல்லோரும் இனிமேல் ஒரே ஹோட்டலில் தான் தங்குவார்கள்.
3. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கருணாநிதிதான் பெரிய மற்றும் இளைஞர் அணித் தலைவர்.
4. இனி அழகிரி சொல்லிக்காமல் ஓட மாட்டார்.
5. திமுக இருக்கும் வரை அன்பழகன்தான் நம்பர் 2.
6. வாரிசு அரசியல் என்பது கலைஞர் குடும்பத்தில் இருக்கலாம். ஆனால் இது மற்ற திமுகவின் அடுத்த கட்டத் தலைகளுக்குப் பொருந்தாது.
7. மாறன், ராசா பதவிகள் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் அவர்களை போல ஊழல் செய்யும் அளவுக்கு யாரும் பயிற்சி அடையவில்லை.
8. சட்ட மன்றத்தில் மட்டும்தான் வெளிநடப்பு என்றில்லை. பொதுக் குழுவிலும் செய்யலாம்.
9. வேற கட்சியில் இருந்தாலும் வீரமணிதான் திமுகவின் நிரந்தர/ஆஸ்தான செய்தித் தொடர்பாளர்.
10. கனிமொழி வெளியே வரும் வரை காங்கிரஸுடன் கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.
யார் முதலில் மஞ்சத் துண்டு வாங்கிப் போட்டுக் கொள்கிறாரோ அவருக்குதான் தலைவர் பதவி என்று ஒரு வதந்தி பரவ அழகிரி கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் மஞ்சள் துண்டு வாங்க போய்விட்டதாக செய்தி.
கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார் என்று செய்தி இப்போ வரை வரலை. :>
Posted by IdlyVadai at 7/24/2011 10:30:00 PM 31 comments Links to this post
Saturday, July 23, 2011
மாறன்களும் மர்டோக்கும்! - ஞாநி
பல ஆண்டுகள் முன்பு சன் டி.வி.யின் அதிபர் கலாநிதி மாறன் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்தியாவின் ரூபர்ட் மர்டோக் ஆக வளர்வதே தம் லட்சியம் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அதாவது பத்திரிகை, டி.வி, சினிமா, மீடியா என்று எல்லாத் தகவல் தொடர்புத் துறைகளிலும் மர்டோக் ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ் நாட்டில் இந்தியாவில் முதல் இடத்தைத் தமது குழுமம் கைப்பற்ற வேண்டும் என்பதே தம் ஆசை என்று அவர் சொல்லியிருந்தார்.
இந்த வாரம் கலாநிதி மாறன், ரூபர்ட் மர்டோக் இருவர் பெயர்களும் செய்திகளில் அடிபடுகின்றன. கலாநிதிக்கும் மர்டோக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஏற்கெனவே அப்பா ஆரம்பித்து நடத்திய பத்திரிகைத் தொழிலில் நுழைந்து அடுத்து பெரு முதலாளிகளாக வளர்ந்தவர்கள். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்கள் குழுமத்தை விரிவுபடுத்துவது, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் முடக்குவது, தொழில் வளர்ச்சிக்கு அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்துவது முதலிய அணுகு முறைகள் இருவருக்கும் பொதுவானவை.
அரசியல் சார்ந்த தொழில் சிக்கலில் இருவரும் இப்போது சிக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக உலகத்தின் மூத்த வார இதழான ‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ பத்திரிகையையே மர்டோக் மூடவேண்டியதாகி விட்டது. சன் குழுமத்தில் சுமங்கலி கேபிள் விஷன், சன் பிக்சர்ஸ் எல்லாம் அதே நிலைமையைச் சந்திக்கக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. பங்கு மார்க்கெட்டில் சன் குழும பங்குகள் கடந்த இரு மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ரூபர்ட் மர்டோக் உலகத்தின் ஒரு பெரும் பத்திரிகை, டி.வி, கேபிள், சினிமா தொழிலதிபர். ஆனால் நிச்சயம் ஒரு முன்னுதாரணமாக இளைஞர்கள் கொள்வதற்கான தொழிலதிபர் அல்ல. தான் ஆதரிக்கும் கட்சியை ஆளும் கட்சியாக்க முயற்சிப்பது, அல்லது ஆட்சிக்கு வரும் கட்சியை, தனக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் கட்சியாக ஆக்குவது என்ற அரசியல் விளையாட்டில் சுமார் 50 வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பவர் இப்போது 80 வயதாகும் மர்டோக்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து, தொழில் சட்டங்களை வளைக்கும் வசதிக்காக அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்து கொண்ட ரூபர்ட் மர்டோக்கின் மீடியா சாம்ராஜ்யத்தில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரபலமானவை. ஆஸ்திரேலியாவில் ஹெரால்ட், பிரிட்டனில் சன், சண்டே டைம்ஸ், டைம்ஸ், அமெரிக்காவில் ஸ்டார், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்று பல பத்திரிகைகள். ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் நியூஸ், ஸ்டார் டி.வி. (நம்ம ஊர் ஸ்டார் விஜய் உட்படத்தான்) என்று மீடியா கம்பெனிகள் எல்லாம் மர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனுடையவைதான்.
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் 38வது இடம் மர்டோக்குடையது. உலக அளவில் 117வது இடம். ஆனால் வரி ஏய்ப்பில் மன்னன். இதுவரை அவர் லாபத்தில் ஏழு சதவிகிதத்துக்கு மேல் வரியாகக் கட்டியதில்லை. வரி ஏய்ப்பதற்காகவே பல கம்பெனிகளை உருவாக்கி அவற்றையெல்லாம் வரிச் சலுகைத் தீவுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
கடைசியாக மர்டோக் தொடர்பான சர்ச்சை, பத்திரிகைத் துறைக்கே அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக கலாநிதி மாறன் சிக்கியிருக்கும் சர்ச்சையும் அப்படிப்பட்டது தான். சாமியார் - நடிகை தொடர்பானது என்று சன் டி.வி. ஒளிபரப்பிய ஆபாசமான வீடியோ, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் பார்க்கக்கூடிய விதத்தில் பல முறை வர்த்தக நோக்கில் ஒளிபரப்பப்பட்டது. மீடியா நெறி முறைகளுக்கு விரோதமானது.
மர்டோக் அண்மையில் இழுத்து மூடிய நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் வார இதழ் கடைசியாக 28 லட்சம் பிரதிகள் விற்று வந்தது. ஐம்பதுகளில் இந்த இதழ் 90 லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது.
நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் இதழ் பற்றிப் படிக்கும்போது சில தமிழ் பத்திரிகைகளின் ஞாபகம் வரக் கூடும். ‘நியூஸ்’ எப்போதுமே பரபரப்பான செய்திகளை நம்பியே இயங்கி வந்திருக்கிறது. அரசியல்வாதிகள், சினிமா, டி.வி.நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பற்றிய செக்ஸ் தொடர்பான விஷயங்களைத் தோண்டித் துருவி வெளியிடுவதுதான் ‘நியூஸ்’ இதழின் பிரதான வேலை.
‘நியூஸ்’ இதழால் அவதூறு செய்யப்பட்டவர்கள் பலர் வழக்கு போட்டு ஜெயித்திருக்கிறார்கள். பல வழக்குகளை கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் பணம் கொடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆங்கில நடிகர் டெனாம் எலியட்டின் மகள் ஜெனிஃபர் தெருவில் திரியும் வேசியாக வாழ்க்கை நடத்துகிறார் என்று ‘நியூஸ்’ தொடர்ந்து எழுதியதையடுத்து ஜெனிஃபர் தூக்கு போட்டுக் கொண்டு செத்தார்.
குழந்தைகளிடம் வலுக்காட்டாயமாக செக்ஸ் உறவு கொள்வோரை அம்பலப்படுத்தும் வேலையில் ‘நியூஸ்’ ஈடுபட்டது. இதில் சில உண்மையான குற்றவாளிகள் சிக்கினார்கள். சில அப்பாவிகள் அவதூறுக்குள்ளானார்கள்.
‘நியூஸ்’ வெளியிட்ட பரபரப்பு செய்திகளில் உண்மையாக இருந்து தாக்கத்தை ஏற்படுத்திய செய்தி கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்வது பற்றியதாகும். மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ‘நியூஸ்’ வெளியிட்டதையடுத்து மூவரும் பத்தாண்டுகளுக்கு விளையாட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்கள்.
‘நியூஸ்’ இதழின் பரபரப்பான செய்திகளுக்குப் பின்னால் இருந்த முக்கிய அம்சம், அது அவற்றைத் திரட்டுவதற்காகச் செய்த ஊழல்களும் லஞ்சம் தரும் நடவடிக்கைகளுமாகும். பல போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு வழக்கின் ரகசியத் தகவல்களைப் பெறுவதை ‘நியூஸ்’ வாடிக்கையாக வைத்திருந்தது. (தமிழ்நாட்டிலும் சில தினசரிகள் காவல் நிலையங்களில் இருக்கும் கீழ்மட்ட கான்ஸ்டபிள்களை ‘கவனித்துக்கொள்ளும்’ வழக்கம் இருந்து வருகிறது.)
இந்த நடவடிக்கைதான் இப்போது பத்திரிகையையே மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களுடைய ஃபோன்களையும், கோர்ட் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பவர்களுடைய ஃபோன்களையும் ஒட்டுக் கேட்பதை ‘நியூஸ்’ இதழ் பத்திரிகையாளர்கள் போலீஸ் உதவியுடன் செய்து வந்தனர். டெலிஃபோன்களின் வாய்ஸ் மெயில்களைப் பயன்படுத்தி செய்திகளை எழுதினார்கள்.
நான்கு வருடங்கள் முன்பு, பிரிட்டிஷ் அரசக் குடும்ப ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டது அம்பலமானது. இளவரசர் வில்லியம் தொடர்பான செய்திகளை ‘நியூஸ்’ தொடர்ந்து வெளியிட்டபோது, ஓரிருவருக்கு மட்டுமே தெரிந்தவற்றை எப்படி வெளியிடுகிறார்கள் என்று வில்லியம் சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒட்டுக் கேட்பு அம்பலமானது. ‘நியூஸ்’ நிருபர் க்ளைவ் குட்மேன் (!) இதை ஒப்புக் கொண்டு நான்கு மாத சிறைத் தண்டனை பெற்றார்.
‘நியூஸ்’இதழுக்கும் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த அளவு நட்பும் உறவும் இருந்தன என்பதற்கு மேற்படி வழக்கே ஓர் அடையாளம். ஏனென்றால் அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஹேமேன் பதவியிலிருந்து விலகி நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராகிவிட்டார்.
ஒட்டுக் கேட்பு மோசடி அம்பலமானதையடுத்து பத்திரிகையின் ஆசிரியர் ஆண்டி கல்சன் பதவியிலிருந்து விலகவேண்டி வந்தது. அவரோ அடுத்தபடியாக இப்போதைய பிரதமரான கேமரோனின் செய்தி ஆலோசகராகப் பொறுப்பேற்றார்! ரூபர்ட் மர்டோக் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ‘நியூஸ்’ இதழுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திவைக்க முயற்சித்தார். ( ஒற்றுமைகள் தொடர்கின்றன?) மேலும் மேலும் தகவல்கள் கசிய ஆரம்பித்தன. காணாமற்போய் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுமியின் ஃபோன் வாய்ஸ்மெயில்களையெல்லாம் ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டதும் அம்பலமானது. ஆயிரக்கணக்கான ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டிருப்பது தெரியவரவும், மூன்று ‘நியூஸ்’ நிருபர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘நியூஸ்’ இதழின் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளை அம்பலப்படுத்தியது இன்னொரு பத்திரிகையான கார்டியன். பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை இந்த விவகாரம் ஒலித்தது. நாடாளுமன்றத்தின் செலக்ட் கமிட்டி இது பற்றி விசாரித்தது. ‘நியூஸ்’ இதழின் நிருபர்கள் கமிட்டி முன்பு பொய்கள் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது.
கடைசியில் பிரதமர் கேமரோன் தம் ஆலோசகர் கல்சனை வீட்டுக்கு அனுப்பி விட்டதோடு நிற்காமல் கைது செய்யவும் உத்தரவிட்டார். ரூபர்ட் மர்டோக், பத்திரிகையை இழுத்து மூடி விட்டார். இன்னும் பல தலைகள் மீது நடவடிக்கை தேவை என்று குரல்கள் எழுந்துள்ளன. மர்டோக்கின் ‘நியூஸ்’ இதழ் மட்டுமல்ல, இதர பத்திரிகைகளான, சன், டைம்ஸ் ஆகியவையும் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனின் மகனுடைய நோய் என்ன என்று அறிவதற்காக ஈ மெயில்கள் மூலம் மருத்துவ ரிகார்டுகளையெல்லாம் திருடியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
எல்லா விவரங்களும் இன்னும் முற்றாக வெளிவரவில்லை. சில வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து பணம் நஷ்ட ஈடாகக் கொடுத்துவிடும்போது அந்தத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்ற சட்ட வசதியை ‘நியூஸ்’ இதழ் குழுமம் பயன்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் சில பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பரபரப்புக்காக அவதூறுகளை வெளியிடுவதும், பல அதிகாரிகள், பொது வாழ்வில் இருப்போரை பிளாக் மெயில் செய்வதும், அரசியல் செல்வாக்கையோ பண பலத்தையோ பயன்படுத்தி இவற்றையெல்லாம் அமுக்கப் பார்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பிரிட்டன் போன்ற நாடுகளில் இவை நடந்தாலும், அமபலமாகும் வாய்ப்பும், அடுத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பும் நம்மைவிட அதிகமாக இருப்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.
இதழியல் நாம் கண்டுபிடித்ததல்ல. மேற்கிலிருந்து நமக்கு வந்ததுதான். ஆனால் அங்கிருந்து யாரை ரோல்மாடலாக எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பெஞ்சமின் பிராங்க்ளினா, புலிட்சரா, ரூபர்ட் மர்டோக்கா ? மர்டோக் காயிருந்தால், அதே படுகுழியில்தான் விழ வேண்டி வரும்.
ஒரு பின்குறிப்பு: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்படவும், நான் தொடர்ந்து பங்கேற்ற ‘மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சி நிறுத்தப்படவும் அப்போது தயாநிதி மாறனின் அமைச்சகத்தில் மர்டோக்கின் ஸ்டார் டி.வி. அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்புதான் காரணம். நிகழ்ச்சிகள் நிறுத்தப்படாவிட்டால், சேனலின் உரிமங்கள் ரத்தாகும் என்று சொல்லப்பட்டது.
நன்றி: கல்கி - ஓ-பக்கங்கள்
சன் டிவி விசாரிப்பையும் நேரடி ஒளிபரப்பு செய்தால் எப்படி இருக்கும் ?
Posted by IdlyVadai at 7/23/2011 07:14:00 AM 17 comments Links to this post
Sunday, July 17, 2011
நீயா ? நானா ?
ராசா இருக்கும் திஹார் சிறையின் பக்கத்து ரூம் காலியாக இருக்கிறது. "யாருமே எதிர்பார்க்காத ஒரு நபர் இங்கே கூடிய சீக்கிரம் வர போகிறார்" என்ற பேச்சு அடிபடுகிறது, யாராக இருக்கும் என்று ஸிபிஐயே குழம்பிபோய் உள்ளது. இதற்கு இடையில் சாதுவாக இதுவரை இருந்த ஸ்டாலின் தன்னை வாரிசாக நியமிக்கும் படி கலைஞருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது.
இப்போது காங்கிரஸ் திமுக இடையிலான கசப்பான உறவைப் பற்றிய பேச்சுக்களை விட
, திமுகவினுள்ளே நடக்கும் உறவுப் பூசல்கள் பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி இவர்களிடையே நடக்கும் பூசல்களால் கட்சியே காணாமல் போனாலும் ஐயமுருவதற்கொன்றுமில்லை.
சென்ற வாரம் மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, திமுகவின் தேர்தல் தோல்விக்குக் குடும்ப அரசியல்தான் காரணம் என வெளிக் கட்சியினர் பேசுவதை விட, திமுகவினரே அதிகம் விமர்சிப்பது தம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்துவதாகத் தெரிவித்திருந்தார். தவிர இனி மதுரையில் திமுக சார்பாக நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியாயினும், அதற்கான போஸ்டர்கள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் அண்ணா மற்றும் கலைஞர் படம் தவிர வேறு எந்தக் குடும்ப உறுப்பினர்களின் படமோ, பெயரோ இடம்பெறக் கூடாது என்றும், தமது அபிமானிகள் மிகவும் விரும்பினால் மட்டும் தன்னுடைய படத்தை இடம்பெறச் செய்யலாமென்றும் கூறியிருந்தார். இவ்வாறு இதுநாள் வரை இலை மறைவு காய் ம்றைவாக இருந்த பூசல் அன்று வெளிப்படையாகவே தெரிய வந்தது.
இந்நிலையில், வரும் 23 ஆம் தேதியன்று கோவையில் நடைபெறவிருக்கின்ற திமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தைத்தான் அனைத்துக் கட்சியினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசாக கட்சியை வழிநடத்தப் போவது யார் போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு 23 ஆம் தேதி பதிலாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு.
ஒருபுறம் அழகிரி ஆதரவாளர்கள், எங்கள் அண்ணன் ஒன்றும் அரசியல் அரிச்சுவடி அறியாதவர் அல்ல; அவரை தாழ்த்திப் பேச யாரையும் அனுமதிக்க முடியாது; அப்படிப் பேசுபவர்கள்க்குத் தகுந்த பதில் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் கொடுப்போம் என்று பேசி வருகின்றனர்.
அழகிரி ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கே கட்சியை வழிநடத்தும் அதிகாரம் கிடைக்குமென ஒருபுறம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், ஸ்டாலின் ஒருபுறம், தனது இளைஞர் அணி மற்றும் தமக்கு மிகவும் நெருக்கமான கட்சியின் அதிகார மையங்கள் மூலம் கட்சித் தலைமைக்கு, குடும்ப அரசியல் மற்றும் 2G அலைக்கற்றை ஊழல் மற்றும் அதைத் தொடர்ந்த கைதுகளே தேர்தல் தோல்விக்குக் காரணம் போன்றவற்றை வலியுறுத்தி கடிதங்கள் எழுதுமாறு பணித்து வருகிறாராம். இதன் மூலம் கட்சி அரசியலில் விரும்பத்தகாதவர்களை ஓரங்கட்டிவிடலாம் என்பது ஸ்டாலினின் கணக்கு.
சென்ற வாரம் கலைஞரிடம் ஸ்டாலின் விவாதம் செய்த போது உட்கட்சி அரசியலில் அழகிரியின் போக்கு பற்றியும், அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பங்கு பற்றியும் திரும்பியுள்ளது. இவ்விஷயத்தில் தந்தைக்கும் தமையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவருமே அறிவாலயத்தை விட்டு கோபமாகக் கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நேரே வீட்டிற்குச் சென்ற கருணாநிதியிடம், அவரது மகள் செல்வியும், அழகிரி பற்றிப் புகார் தெரிவிக்க, கோபத்தின் உச்சிக்கே சென்ற கருணாநிதி, மூட்டை முடிச்சுகளுடன் மாமல்லபுரத்திற்குக் கிளம்பிச் சென்று விட்டாராம்.
அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்ற இருவர் தரப்பிலிருந்துமே கருணாநிதி மிகுந்த நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சித் தலைமைப் பொறுப்பை சீக்கிரமே ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர் தரப்பும், கருணாநிதியே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டுமென அழகிரி தரப்பிலிருந்தும் கருணாநிதிக்கு கடுமையான நெருக்கடிகள் வருவதாகத் தெரிகிறது.
கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் குடுமிப் பிடிச் சண்டைகளுக்கு நடுவே இரு முக்கிய மாவட்டச் செயலாளர்களின் ராஜினாமா கட்சிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் கோவை பொதுக்குழு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்டாலினின் ஆணைப்படி எழுதப்படவுள்ள கடிதங்களில் இரண்டு முக்கியமான விஷயங்கள் வலியுறுத்தப்படுமாம். ஒன்று கட்சியில் குடும்ப ஆதிக்கம் மற்றொன்று தேர்தல் தோல்விக்கு முழுக் காரணம் 2G ஊழல் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் ஆகியன.
ஸ்டாலின் ஆறு பக்க ரகசிய கடிதத்தில் காங்கிரஸ் எப்படி திமுகவை ஓரம்கட்டியது என்ற தகவல் 23 தேதி ஹைலைட் என்று பேசிக்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸுக்குப் போட்டியாக பல அணிகள் உருவெடுத்து திமுக முன்னோற்றம் அடைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. திமுகவில், இன்று நீயா ? நானா என்ற போட்டி அதிகரித்துள்ளது, தவராமல் இன்று 9 மணிக்கு விஜய் டிவி பார்க்கவும்.
Posted by IdlyVadai at 7/17/2011 08:53:00 AM 16 comments Links to this post
Labels: அரசியல்
Friday, July 15, 2011
தெய்வத்திருமகன்/ள் - FIR

இன்று இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டுப் போனதற்குக் காரணம் அடிக்கடி விக்ரம், விஜய் டிவியில் ஜூலை 15 இந்த படம் ரிலீஸ் என்று குழந்தை போல சொல்லிக்கொண்டே இருந்ததுதான்..
ஒன்றும் தெரியாமல் கோர்ட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் மனநலம் குன்றிய விக்ரமிடம் சந்தானம், அனுஷ்கா கோஷ்டி செய்யும் காமெடி நல்ல தொடக்கம். "சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல" போன்ற வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.
மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்ற கேள்வி நம் மனதில் எழுதவதாலோ என்னவோ "சம்பவம் என்று ஒன்று நடந்தால், சம்பந்தபட்ட இரண்டு பேருல ஒருத்தர் விவரமாய் இருந்தால் போதாதா?" என்ற வசனத்தை M.S.பாஸ்கர் கூட்டாளிகள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்களோ என்னவோ. விக்ரமையும் அவர் மனைவியும் சந்தேகப்படும் காட்சிகள் கொஞ்சம் முகம்சுளிக்க வைக்கிறது, கதைதான் நன்றாக இருக்கிறதே, பிறகு எதற்கு இந்த மாதிரி காட்சிகள்? S.M.பாஸ்கருக்கு- விக்ரமுக்கும் விரோதம் வரவழைக்க எவ்வளவோ உத்திகள் இருக்கிறது.
விக்ரமின் ஃபிளாஷ் 'நிலா, நிலா' என்று சொல்லிக்கொண்டிருக்க, என்ன என்பதை ஃபிளாஷ்பேக் கொண்டு கதை சொல்லுகிறார்கள். சாதாரண வேகத்தில் போய்க்கொண்டு இருந்த கதை விக்ரமை ஏமாற்றிவிட்டு காரிலிரிந்து இறக்கிவிட்டு "வண்டியை எடுப்பா" என்று சொன்ன பிறகு வேகம் பிடிக்கிறது.
கோர்ட்டில் அதிக ஃபிரில் வைக்காத கோட், கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு, காட்டுக்கத்தல் கத்தாமல், அமைதியாக வாதாடுகிறார். அடிக்கடி ஒரே மாதிரி கோர்ட் செட்டைப் பார்ப்பதினாலோ என்னவோ 2G கேஸ் நடக்கும் இடமோ என்று நமக்கு சந்தேகம் வரத்தான் செய்கிறது.
"கதை சொல்லப் போகிறேன்" பாடலில் ரஜினியின் ராணா படத்தில் வருவது போல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும், ஆனால் படத்தின் கதையோட்டத்தை கட்டாயம் பாதிக்கிறது.
இசை G.V.பிரகாஷ், சில இடங்களில் இளையராஜா சாயல் தெரிகிறது. குறிப்பாக 'பா' படத்தில் வரும் அந்த தீம் மியூஸ்க் போல விக்ரம் - குழந்தை சந்திக்கும் இடங்களில், மற்றும் சில இடங்களில் வரும் நிசப்தம். படத்துடன் சேர்ந்த இசை.
ஒளிப்பதிவு, பல இடங்களில் நன்றாக இருக்கிறது, மழையை மணி மணியாக எடுக்கத் தெரியும் என்பதற்காக விக்ரம் அனுஷ்கா மழைக் காட்சி தேவையில்லாத ஒன்று. அதுவும் மனவளர்ச்சி குன்றிய ஹீரோவாகவே இருந்தாலும் படத்தில் வரும் பெண்ணுடன் டூயட், மழைப்பாட்டு பாடவில்லை என்றால் அப்பறம் எப்படி அவர் தமிழ் ஹீரோ ஆவார் ? You too Vikram?
விக்ரமின் குழந்தையாக வரும் சின்னக் குழந்தை விக்ரமுக்குப் போட்டியாக நடிக்கிறது. கூடிய சீக்கிரம் ஹார்லிக்ஸ், பிஸ்கெட், ஏன் துணி சோப் விளம்பரத்திலும் ஒரு ரவுண்ட் வரும்.
சில காட்சிகளில் நிஜமாகவே கொஞ்சம் கண்கலங்க வைக்கிறார்கள், அவைதான் இந்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காட்சிகள்.
கடைசியாக கோர்ட்டில் வரும் அந்த ஐயங்கார், ஐயர் வக்கீல் அடிக்கும் கமெண்டரி பற்றி சொல்லவில்லை என்றால், அடுத்த வேளை புளியோதரை கிடைக்காது :-) அதனால் அவர்களையும் பற்றி ஒரு வரி !
படத்துக்கு மார்க் - 7/10
கொசுறு: இந்த படத்தின் பெயர் தெய்வத்திருமகனா ? அல்லது தெய்வத்திருமகளா ? என்று மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். இந்த தலைப்பை வைத்து வீன் பிரச்சனை வேண்டாம் என்றுதான் தலைப்பை மாற்றினோம் என்கிறார் இதன் இயக்குனர் விஜய். ஆனால், அவர்களுடைய நோக்கம் தலைப்பு அல்ல பிரச்சனைதான். என் வீட்டு முன்பு ஆர்பாட்டம் செய்ய வந்தவுடனேயே நான் தலைப்பை மாற்றி விடுகிறேன் என்று கூறிவிட்டேன். அப்படியும் வந்துட்டோம் சார். அதனால கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு போயிடுறோம்" என்று சொல்லியிருக்கிறார்கள் ஆர்பாட்டக்காரர்கள்!
கொஞ்சம் சினிமா, கொஞ்சம் டிராமா போல இருந்தாலும், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!
Posted by IdlyVadai at 7/15/2011 06:29:00 PM 21 comments Links to this post
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Wednesday, July 13, 2011
ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம்: கலைஞர்
கேள்வி: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலை திருப்பணி செய்யப்போவதாக அறிவித்து ரூ.18.5 லட்சம் அதற்காக செலவிட ஜெயலலிதா ஆணை பிறப்பித்திருக்கிறாரே?
கலைஞர் பதில்: ஓமந்தூரார் வளாகத்திற்குள் தி.மு.க. அரசு புதிய தலைமைச்செயலகம் கட்டியது என்பதற்காக அந்த இடத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீதியரசர் தங்கராஜை கொண்டு விசாரணை ஆணையமும் அறிவித்திருக்கிறார். அது மாத்திரமல்லாமல், அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆலமர பிள்ளையார்கள் மழையிலும் வெயிலிலும் வாடிக்கொண்டிருக்கும்போது கருணாநிதி புதிய தலைமைச்செயலகத்தைக் கட்டிய காரணத்தால், அங்கேயுள்ள ஆலமர பிள்ளையாருக்கு திருப்பணி செய்ய அம்மையார் ஆணை பிறப்பித்திருக்கிறார் போலும்.
யாரை நக்கல் அடிக்கிறார், பிள்ளையாரையா ? அல்லது அம்மையாரையா ?
Posted by IdlyVadai at 7/13/2011 06:10:00 PM 9 comments Links to this post
கல்வி அளியுங்கள்!!!...
அன்புள்ள இட்லி வடைக்கு,
என்னுடைய கதையை பதித்தமைக்கு நன்றி... இன்னும் ஒரு பதிவை இட்லி வடையில் பதிக்க வேண்டுகிறேன். நீங்கள் படித்து பதிக்க தகுதியுடைய பதிவாக இருந்தால் பிரசுரிக்கவும்.
மிக்க நன்றி!,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை
என்று உவந்தருளிய வள்ளுவர் பிறந்த நாட்டில் வாழும் ஏழை குழந்தைகள் அனைவருக்கும் கல்வி புகட்டும் பொருட்டு பல அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் அவ்வரசு பள்ளிகளில் பயிலும் அணைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கின்றதா என்று ஆராய்ந்தால் குறைவே. இதற்கு பல காரணங்களை நம்மால் கூற இயன்றாலும் பாதிக்க படுவதென்னவோ ஏழை குழந்தைகள் தான்.
இவ்வாறு கல்வி முழுவதுமாக கெடைக்க பெறாத ஏழை குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க பெறுவதற்காக இயங்கும் ஒரு அமைப்பு யூரேகா கல்வி இயக்கம். இவ்வியக்கம் உங்களையும், என்னையும் போல் படித்து நல்ல வேலையில் அமர்ந்துள்ள சில நல்லுள்ளம் கொண்டவர்களின் மனதில் உதித்தது. இவர்களில் பலர் ஐ.ஐ.டி, பிட்ஸ் போன்ற கல்லூரிகளில் படித்து, நல்ல பணியிலும் இருந்தனர். இவ்விக்கள் ஆரம்பிக்கும் பொருட்டு அவர்களது வேலைகளை துறந்து பொது பணிகளில், அதுவும் கல்வி தரத்தை உயர்த்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இவர்களது இடைவிடாத உழைப்பாலும், ஆராய்ச்சியாலும் பல எளிய வகை கல்வி சாதனங்களை உருவாக்கினர். பின்னர் இச்சாதனங்களை கிராமங்களில் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சென்றனர். மேலும் இச்சாதனங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென கருதி மிக குறைந்த பொருட்செலவில் அவற்றை உருவாக்கினர்.
கடந்த பதினைந்து வருடமாக கல்வியில் சேவை செய்து வரும் இவர்கள் தற்போது தமிழ் நாட்டில் ஆயிரம் கிராமங்களில் பணி புரிகின்றனர். இந்த ஆயிரம் கிராமங்களில் ஒரு கிராமத்திற்கு சராசரியாக 75 குழந்தைகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். இதை யூரேகா சுப்பர் கிட்ஸ் என்னும் ப்ரோக்ராம் மூலம் செய்து வருகின்றனர். இவர்களது பயிற்சி முக்கியமாக அரசு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். அவ்வாசிரியர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இந்த பயிற்சி மைய்யங்களில் பங்கு கொள்ளல்லாம்.மேலும் பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பு படித்து வேலை தேடும் மாணவர்களோ அல்லது மாணவிகளோ இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்பு அளிக்கின்றனர். இம்மாதிரி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் வகுப்பில் அவர்கள் உபயோகிக்க பாட நூல்கள் மற்றும் பல வகையான கலந்துரையாடும் முறை கொண்ட கல்வி பயிற்சி அளிக்கும் சாதனங்களும் அளிக்கப்படுகின்றன. இவர்கள் தினமும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை கிராமங்களில் உள்ள குழந்தைகளை, பொதுவான ஒரு இடத்தில் சேர்த்து அங்கு வகுப்புகளை நடத்துகின்றனர். நாளடைவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்டு அவர்களும் இப்பொழுது இயக்கத்தில் பங்கு கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
நான் இவ்வியக்கதுடன் கடந்த எட்டு வருடமான தன்னார்வ தொண்டாளனாய் உள்ளேன். கடந்த ஆண்டு யூரேகா கல்வி இயக்கம் தோற்றுவித்த "adopt a village" என்னும் திட்டம் மூலம், எந்த ஒரு தனி நபரும் இவ்வியக்கம் நடத்தி வரும் சேவைக்கு உதவ வழி வகுத்து. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராமத்தில் ஓராண்டுக்கு ஆகும் செலவை ஏற்று 75 குழந்தைகளுக்கு கல்வி அளிக்கலாம். நான் 2 கிராமங்களை தத்தெடுதுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன் மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மையங்கள் எவ்வாறு இயங்குகின்றன என கண்காணிக்க சென்றேன். அங்குள்ள ஆசிரியர்கள் காட்டும் ஆர்வமும், ஆவர்களது பயிற்சி முறைகளும் மெய்சிலிர்க்க வைத்தன.மேலும் இவ்வாசிரியர்கள் வெறும் 600 ரூபாயில் இருந்து 1000 ருபாய் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்கள். மேலும் சில பெற்றோர்கள் என்னிடம் வந்து இந்த கல்வி மையங்களை மேலும் பல கிராமங்களில் தொடங்கி சேவை செய்யுங்கள் என்றும் அன்போடு வேண்டிக்கொண்டார்கள். என்னால் இயன்ற வரை ஒரு தன்னார்வ தொண்டாளனாய் முடிந்த வரை சேவை செய்து வருகிறேன் மேலும் 2 கிராமங்களை தத்தெடுதுள்ளேன்... இதை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதன் மூலம் மேலும் பலர் எவ்வியக்கதிர்க்கு உதவ முன் வருவர் என்று எண்ணுகிறேன்!...
எங்களை பற்றி மேலும் அறிய இனைய முகவரியான http://aidindia.in அல்லது http://eureka.aidindia.in . மேலும் விபரங்களுக்கு என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் aid.selva@gmail.com , என்னுடைய கைபேசி எண் 9790951652 .
--
Selva
+91-9790951652
Adopt a Village!... ask me how!
read me at http://selvasword.blogspot.com
நீங்கள் பணம் கொடுத்துதான் உதவ வேண்டும் என்று அவசியமல்ல.. தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்டவர்கள் எங்களுக்கு வேறு பல வழிகளிலும் உதவலாம்.
Posted by IdlyVadai at 7/13/2011 04:48:00 PM 2 comments Links to this post
Tuesday, July 12, 2011
முகுல் ராய் பிரபலமான விபத்து!
முன்பொரு காலத்தில், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ரயில்வே மந்திரியாக இருந்த போது, தமிழகத்தில் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பதவி விலகினார். பின்னாளில், நேருவிற்குப் பிறகு சாஸ்திரி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் சில சமரசங்கள் செய்து கொண்டதைத் தாளாமல், ரஷ்யாவின் தாஷ்கண்டிலேயே உயிர் நீத்தார்.
ஒரு முடி நீத்தாலும் உயிர் துறக்குமாம் கவரிமான். அது போன்ற கவரிமான்களைக் கண்ட அரசியல் பாரம்பரியம் நம் பாரதத்தினுடையது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழ். மந்திரி சபை மாற்றம் என்பதை ஏதோ கல்யாணம் போல மீடியாக்கள் கொண்டாடுகிறது. இவருக்கு என்ன மார்க் அவருக்கு என்ன மார்க் யார் ரயில்வே மந்திரி, யார் தலை உருளும் என்பது தான் தற்போது செய்தி. யார் நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று - மூச்.
பெற்ற மக்கள், கட்டிய மனைவி என அனைவரும் ஊழலுக்காக சிறை செல்ல வேண்டியிருப்பினும், அவர்களுக்கு பதிலாக என்ன பதவி தருவீர்கள் என இழவு வீட்டில் இயன்றதைச் சுருட்டிய கதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி சென்னையில் கலைஞரை சந்தித்த போது ராசா, மாறனுக்கு பதில் யாருடைய பெயர் என்று கேட்க அதற்கு கலைஞர் கனிமொழி ( அதாவது அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு) என்று பதில் சொல்ல பிரணாப் முகர்ஜி பயந்துக்கொண்டு கால் நடையாகவே டெல்லிக்கு போகலாமா என்று யோசித்தாராம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது அத்யாயத்தில் ரயில்வே மந்திரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செல்வி மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற வேளை என்ன முகூர்த்தமோ? தொடர்ந்து ரயில் விபத்துக்கள்; எண்ணற்ற உயிரிழப்புகள். ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில், ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள் என பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மற்றொருபுறம் ரயில் விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்பிற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போகிறது? அல்லது முறையாகச் செலவிடப்பட்டும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் சரியில்லையா? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயைக் கொண்டுள்ள பாரதம், உலகில் அதிக ரயில் விபத்துக் காவுகளை வாங்கியதில் முதன்மையாக உள்ளது.
சமீபத்திய நிகழ்வாக, நேற்றைய தினம் இரு கோரமான ரயில் விபத்துக்கள். ஒன்று உத்திரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில், கல்கா எக்ஸ்பிரஸ்; மற்றொன்று அஸ்ஸாமில். ஒரே நாளில் நிகழ்ந்த இவ்விருவேறு விபத்துக்களில் சுமார் 80 உயிர்கள் போய்விட்டன. ஏற்கனவே மமதா தலைமையில் குறட்டையில் ஆழ்ந்திருந்த ரயில்வே அமைச்சகம், அவர் கையை விட்டு பிரதமர் கைக்குச் சென்றவுடன், ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது.
மமதா மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே அமைச்சகம் பிரதமர் வசம் போய்விட்டது தற்காலிகமாக, ஆனாலும், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் ஃபார் ரயில்வேஸ் என்று கூறப்படும் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தன்வசமே வைத்துள்ளது. அதன் பொறுப்பில் இருப்பவர் முகுல் ராய் என்ற மஹானுபாவர். இவ்விரு விபத்துக்களும் நடைபெற்று 48 மணி நேரமாகியும், இத்துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் இவர், இன்னும் விபத்து ஸ்தலத்தைச் சென்று பார்வையிடவில்லை. ஸ்தலத்தைப் பார்வையிட்டு, வார்த்தை ஜோடனைகளால் வருத்தப்படுவதென்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபாயினும், அதைச் செய்யத தவறியதோடு மட்டுமல்லாமல், நான் ஏன் போக வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார் முகுல் ராய். நான் என்ன ரயில்வே துறைக்கு கேபினட் மந்திரியா? பிரதமர்தானே அத்துறைக்குப் பொறுப்பு? அவர் என்னிடம் போகச் சொல்லவில்லை....இதுதான் இவர் கூறிய பதில். காலையில் **** வந்தால் கூட இவர் பிரதமரை கேட்டுவிட்டு தான் போவார் என்று நினைக்கிறேன்.
தவிர, நான் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன், தேவைப்பட்டால் போவேன் என்கிறார். இதுதான் ரயில்வே அமைச்சகத்தின் லட்சணம். இதே முகுல் ராய் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆயிரமாயிரம் மைல்கள் ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் பயணப்பட்டார். இப்போது பதவி வந்ததும், நான் ஏன் போக வேண்டுமென்கிறார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸும் ஜால்ரா அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சீறுகின்றன. மீடியாக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
இவ்வளவு கூத்தும் நடந்த பிறகு, ஸ்தலத்தைப் போய்ப் பாருங்கள் என்று பிரதமர் மென்மையாகக் கூறுகிறார். அவரைப் பாவம் என்ன சொல்வது? இது ஒன்றுதான் அவருக்குக் கவலையா? தெலங்கானா எம்பிக்கள் ராஜிநாமா செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸைப் பகைத்துக் கொண்டால் என்னாவது? மமதாவுக்கு மத்தியில் அரசியல் செய்வது வெறும் பொழுது போக்கு. நான் போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாரானால் என்னவாகும் மத்திய அரசின் கதி? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எவ்வளவு செலவாகும்?? இதெல்லாம் எண்ணிப் பார்த்துதான், போய் பாருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவரால் தன்னிச்சையாக, யாரிடமும் அனுமதி வேண்டாமல் செய்ய முடிந்தது, அனுதாபம் தெரிவிப்பது ஒன்று மட்டுமே. அதைச் செவ்வனே செய்து விட்டார்.
உயிர் நீத்த 80 அப்பாவிகளின் சவங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸும், மத்திய காங்கிரஸ் சர்க்காரும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்கால விடிவெள்ளி, தியாகத் திருவிளக்கின் தவப் புதல்வர் இதையெல்லாம் கேட்பாரா என்றால் அதுவுமில்லை. கூட்டணிக் கட்சியாயிற்றே! மமதாவைக் கேட்பதை விட மாயாவதியை எதிர்ப்பது அவசியமல்லவா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??
பிரதமர் செய்ய வேண்டியது - அடுத்த பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் இருக்கும் தின்பண்டத்தில் ஊக்க மருந்து கலந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். நம் எம்.பிக்கள் எங்கே போகிறார்களோ இல்லையோ நிச்சயம் கேண்டீன் பக்கம் போவார்கள். ஊக்க மருந்து உட்கொண்ட பிறகாவது ஓடி ஓடி உழைப்பார்களா என்று பார்க்கலாம்.
Posted by IdlyVadai at 7/12/2011 09:59:00 AM 17 comments Links to this post
Labels: செய்தி விமர்சனம்
Friday, July 08, 2011
ராசாவை ஓவர்டேக் செய்த பத்மநாபஸ்வாமி

ஒரே நாளில் திருப்பதி வெங்டேசப் பெருமாளையும், பொற் கோயிலையும் ஏன் அ.ராசாவையும் ஓவர்டேக் செய்த பெருமை திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமியையே சேரும்.
கடந்த ஒருவார காலமாக திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில்தான் அனைத்து பத்திரிக்கை மற்றும் செய்திச் சானல்களின் தலைப்புச் செய்தி. இந்திய மீடியாக்கள் மட்டுமல்லாது நியூயார்க் டைம்ஸ், பிபிசி அமெரிக்க மற்றும் ப்ரிட்டிஷ் மீடியா ஜாம்பவான்களும் திருவனந்தபுரம் கோவிலைப் பற்றிச் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. டைம் மாகஸின், அதன் எடிட்டோரியல் டீமில் ஒருவராகப் பணிபுரியும், திருவனந்தபுரம் தொகுதியின் எம் பியான சர்ச்சைப் புகழ் சஷி தரூரின் மகனான இஷான் தரூரை இக்கோவில் தொடர்பான விஷயங்களுடன் வருமாறு பணித்து கேரளத்திற்கு அனுப்பியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது அங்கே? பல நூறு ஆண்டுகளாகப் பூட்டியிருந்த கோவிலின் பாதாள அறைகளுக்குள் இருக்கும் தங்கப் புதையல்தான்.
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடந்த அறைகள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்குப் பின் திறக்கப்பட்டுள்ளது. பூட்டப்பட்டுள்ள அறைகளில் இருக்கும் பொக்கிஷங்களைப் பட்டியலிட்டு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, அதற்காக ஏழு பேர் கொண்ட ஒரு பெஞ்சையும் நியமித்துள்ளது உச்சநீதி மன்றம். கிணறு தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக குவியல் குவியலாக தங்க, வைர, நவரத்ன ஆபரணங்கள் வந்து கொண்டே இருக்கின்றனவாம். மொத்தமுள்ள ஆறு அறைகளில், இதுவரை ஐந்து அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு அறையின் கதவு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. தவிர அது மிகுந்த பாதுகாப்புடன் பல பூட்டுக்களைக் கொண்டுள்ளதாகவும், தவிர அக்கதவு முழுவதும் பாம்பினுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் கூடிய கதவாக இருப்பதால், மற்ற ஐந்து அறைகளைக் காட்டிலும் அதிக மதிப்பிலான பொக்கிஷங்கள் அவ்வறையில் இருக்கலாமென்றும், பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் பிராணாபாயம் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுவதால் அவ்வறை இதுவரை திறக்கப்படவில்லை. தவிர எல்லாமே பாதாள அறைகளாக இருப்பதால், அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, நகைகளை மதிப்பிடும் பணி சற்றே மந்தமாகியுள்ளதென்றாலும், இதுவரை பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் இன்றைய மொத்த சந்தை மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் முதல் சுமார் ஐந்து லட்சம் கோடிகள் வரை இருக்கலாம் என பல்வேறு ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத கோவிலைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், இப்பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதன் மூலம், பத்மநாபஸ்வாமி உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாகியுள்ளார் என்கிறார்.
கேரள முன்னாள் தலைமைச் செயலர் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகையில், கேரளக் கோவிலில் கிடைத்துள்ள அனைத்துப் புதையலும் கோவிலுக்கே சொந்தமென்றும், அதில் ஒரு நயா பைசாவிற்குக் கூட அரசாங்கமோ, மற்ற எவருமோ உரிமை கொண்டாட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அரச பரம்பரையச் சேர்ந்த மஹராஜாவே கோவிலின் அறங்காவலர் மற்றும் கோவில் சொத்துக்களின் அதிகாரப் பூர்வ நிர்வாகி என்றும், மற்ற எவரும் இப்புதையல் தொடர்பான விஷயங்களில் தலையிட முடியாதென்றும் கூறியுள்ளார்.
இவ்விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே மெளனம் காத்துவந்த கேரள அரசாங்கமும் தனது மெளனத்தைக் கலைத்து, அனைத்து பொக்கிஷங்களும் கோவிலின் உடைமை என்றும், அவையனைத்தும் கோவிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளது. ஆனாலும் இப்பொக்கிஷங்கள் தொடர்பான வேறு சர்ச்சைகள் எழாமல் இல்லை. இதில் மிகவும் வேடிக்கையாக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கறுப்புப் பணம், அவையனைத்தும் அரசாங்கத்தைச் சேரும் என்று ஒரே போடாகப் போட்டுள்ளார். கேரளாவின் ஆளுங்கட்சியும் காங்கிரஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆயினும் அதன் கருத்து இவருடன் முரண்படுகிறது.
எனினும் இந்த சர்ச்சை தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் வசமே உள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள எழுவர் குழு இப்பொக்கிஷங்களை ஆய்வு செய்து, அதன் மொத்த சந்தை மதிப்பை நிர்ணயித்து கோர்ட்டாரிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, இவற்றில் இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிகிறது. இதனிடையே கோவிலின் சொத்துக்களின் உரிமை தொடர்பான பல ஹேஷ்யங்கள் உலவுவதால், திருவாங்கூர் சமஸ்தான இளவரசர், தவிர அரச பரம்பரையினர் அச்சொத்துக்களில் ஒரு நயா பைசா உரிமை கூட கோரப் போவதில்லை எனவும், அவையனைத்தும் அனந்தபத்மநாபருக்கே சொந்தமெனவும், ஆகவே ஆறாம் எண் அறையைத் திறக்கக் கூடாதென்றும் உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெற்றுள்ளார். கோர்ட்டும் இதனை அனுமதித்து, தடையுத்தரவு வழங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், பொக்கிஷங்களை மதிப்பிடும் அதிகாரிகள் அவை தொடர்பாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக் கூடாதென்றும், பொக்கிஷங்களின் மதிப்பீடு அனைத்தும் வீடியோ படமெடுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவு வழங்கியுள்ளது.
தற்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் மஹாராணியும், மஹாராஜா உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவினுடைய சகோதரி மகளுமான லக்ஷ்மி பாய் குறிப்பிடுகையில், கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளவற்றை புதையல் என்று சொல்வது தகாதென்றும், அவையனைத்து பக்தர்களால் அவருக்குக் காணிக்கையாக்கப்பட்ட சொத்துக்கள் என்றும் கூறியுள்ளார். இக்கோவிலுக்கு ராஜ ராஜ சோழன் மற்றும் விஜயநகரச் சக்ரவர்த்தி க்ருஷ்ண தேவராயர் போன்றோர் காணிக்கைகள் செலுத்தியுள்ளதற்கான ஆவணங்கள் உள்ளன.
இந்நகைகளில் பேர்பாதியை ஏற்கனவே திப்பு சுல்தான் கொண்டு போய்விட்டதாக ஒரு தியரி சொல்லப்படுகிறது. இது எவ்வளவு உண்மை என்று விளங்கவில்லை. மீதமுள்ள நகைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் கோவிலின் பாதாள அறைகளுக்குள் மூட்டை மூட்டையாகக் கட்டிப் பாதுகாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டிஷ் ராஜ்யம், திப்பு சுல்தான் போன்ற சிங்கங்கள் வாயிலிருந்து தப்பிய புதையல்கள், இப்போது புலி வாயில் அகப்பட்ட கதையாக, மத்திய அரசுக்கே சொந்தம் என சில காங்கிரஸார் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கின்றனர். கறுப்புப் பணமாம். இது அவர்கள் கையில் கிடைத்தால் என்னவாகுமென்று சொல்லியா தெரிய வேண்டும்? முன்னர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் காட்சி படுத்துகிறேன் பேர்வழி என்று அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கொண்டு போன திருவரங்கம் கோவில் நகைகள் பாதி எங்கு போயின என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவையெல்லாம் பொதுக் காரியத்திற்கு செலவழிக்கப்பட வேண்டுமென கி.வீரமணி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். பெரியார் விட்டுச் சென்ற இவர் வசமுள்ள சொத்துக்களைக் கூடத்தான் தர்மத்திற்குச் செலவழிக்கலாம். ஆனால் இவரோ தனது மகனை அதற்கு வாரிசாகப் போட்டுள்ளார். இதெல்லாம் அவரிடம் யார் கேட்பது?
- யதிராஜ்
இந்த கோவில் தமிழ் நாட்டில் இருந்தால், கோபாலபுரம் அல்லது சி.ஐ.டி காலனி வழியாக மொட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள்.
Posted by IdlyVadai at 7/08/2011 10:19:00 PM 41 comments Links to this post
Labels: செய்தி, யதிராஜ சம்பத் குமார்
லட்டு விநியோகம் செய்த ராசா
நேற்றைய தினம் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு 2G ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக ஆஜராக வந்திருந்த ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா, தயாநிதி மாறனின் ராஜிநாமா செய்தி அறிந்து அங்கிருந்த அனைவருக்கும் லட்டு விநியோகம் செய்தார். லட்டுடன் அந்த ராஜிநாமாவைக் கொண்டாடியவர்களில் கனிமொழியின் தாயார் ராசாத்தியும் ஒருவர் என்பதுதான் விசேஷம்.
நேற்றிலிருந்து திருப்பதியில் ஒருவருக்கு இரண்டு லட்டு தான். அதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்புகிறவர்கள் உடனே பாட்டியாலா நீதிமன்றத்துக்கு செல்லவும்.
குஞ்சாலாடு செய்முறை இங்கே
Posted by IdlyVadai at 7/08/2011 09:40:00 AM 12 comments Links to this post
Labels: செய்தி
Thursday, July 07, 2011
மீடியாக்கள் தான் காரணம் - கலைஞர்
உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் `மீடியா'க்களின் ஆட்சி நடைபெறுகிறது.அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல. அவருக்கு தி.மு.க. துணை நிற்கும். மத்திய அரசிடம் இருந்தோ, காங்கிரஸ் தலைவியிடம் இருந்தோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்கிறார் கலைஞர்.
சன் டிவி, கலைஞர் டிவியும் மீடியா கிடையாதா ?
Posted by IdlyVadai at 7/07/2011 10:21:00 PM 21 comments Links to this post
Labels: செய்தி
கார்ட்டூன்
Posted by IdlyVadai at 7/07/2011 10:13:00 PM 0 comments Links to this post
Labels: கார்ட்டூன்ஸ்
அப்படியா ?
Posted by IdlyVadai at 7/07/2011 01:53:00 PM 24 comments Links to this post
Labels: செய்தி
Tuesday, July 05, 2011
கல்மா"டீ"

சில வாரங்களுக்கு முன் ஞாநி கல்கியில் எழுதியது...
“திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”
தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?
தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.
‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’
அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”
தற்போது லேட்டஸ்ட் கல்மாடிக்கு டீ கொடுத்தவர் சஸ்பெண்ட் என்பது தான்.
ப்ரிட்டிஷ் ராஜ்யத்தில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்தமானின் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்போது இத்தாலிய காங்கிரஸ் ராஜ்யத்திலும் நான்கு பேர் அந்தமான் செல்லுலருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவும் ஒருவகை தண்டனைதான் என்றாலும், இவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக அங்கு அனுப்பப்படவில்லை, சிலரை சிறையில் சுதந்திரமாக இருக்க விட்டதற்காக.
ஐக்கிய ஊழல் கூட்டணியின் இரண்டாவது பகுதி ஆட்சிக்காலத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களில் இரண்டாமிடம் பெற்றுள்ள காமன்வெல்த் ஊழல்களின் சூத்ரதாரியாகக் கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இனிமேல் இவரை இனிமேலும் காபந்து செய்தால் ஆட்சி செலுத்துவது கடினம் என்ற மிகவும் கட்டாயமான சூழலில், இவர்மேல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் திஹார் சிறைவாசிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் திஹார் சிறைக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்துள்ளார். அப்போது, சுரேஷ் கல்மாடி சிறை அதிகாரி ஒருவரின் அறையில் மிகவும் சுதந்திரமாகச் சிரித்துப் பேசியபடி, டீ, பிஸ்கட் மற்றும் இதர ஸ்நாக்ஸ் வகையறாக்களை வகை தொகையின்றி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாராம். இது சிறை விதிகளின்படி அத்து மீறல் என்பதால், கல்மாடிக்கு டீ கொடுத்து உபசரித்த அதிகாரிகள் நால்வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்நால்வரும் அந்தமான் செல்லுலர் சிறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெளியில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் சிறையிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றதால் வந்த வினை இது என்றாலும், அந்த நீதிபதி சுத்த விவரம் தெரியாதவராக இருப்பார் போலும். வெறுமனே டீ கொடுத்ததற்காக அந்தமானுக்கு மாற்றல் என்றால், தமிழக புழலில் நிகழும் வைபவங்களுக்காக அங்கிருக்கும் அதிகாரிகள் எங்கெங்கெல்லாம் மாற்றப்படுவர்? வாரமிருமுறை அரசாங்கமே அசைவ விருந்து போடுகிறது, தவிர சிறைக்குள் பல சட்டவிரோதமான வியாபாரங்களும் அமோகமாக நடக்கிறதென்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இருக்கவே இருக்கு அண்ணா பிறந்த நாள்... இதற்கு என்ன செய்வது?
கல்மாடிக்கு சலுகை கொடுத்தவருக்கு, தண்டனை என்றால் ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?
Posted by IdlyVadai at 7/05/2011 08:47:00 PM 14 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
என்பிலதனை வெயில் காயும் - - சுபத்ரா
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டே வாங்கினேன். படிக்கத் தொடங்கியதும் பாதியில் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஸ்ட்ரெட்சில் படித்து முடித்து புத்தகத்தை மூடிக் கீழே வைக்கையில் தான் மீண்டும் அந்தத் ‘தலைப்பு’ கண்ணில் பட்டது. புத்தக அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை வேகமாகப் புரட்டி அப்போதே எதையோ தேட ஆரம்பித்திருந்தேன்...
’விமர்சனம்’ என்று சொன்னால் அது மிகை. புத்தகம் படிக்கையில் எனக்குத் தோன்றிய உணர்வுகளைக் கருத்துகளாகப் பதிய விரும்பியே இந்தச் சிறு முயற்சி.
நான் படித்த நாஞ்சில் நாடனின் முதல் புத்தகம் இது. புத்தகம் முழுக்க ‘நாகர்கோவில்-தமிழ்’. நான் மணிமுத்தாறில் தங்கி வேலைப் பார்த்துவந்த போது என்னுடன் வேலை பார்த்த பெண்மணிகளில் பலர் நாகர்கோவில், சுசீந்தரம், வடசேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தமிழுக்குப் பழகியிருந்ததாலும் மேலும் எனக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி தான் என்பதாலும் புத்தகம் முழுவதையும் இயல்பாக என்னால் வாசிக்க முடிந்தது!
பப்படம் வறுக்கும் வாசனையுடன் மணமாக ஆரம்பிக்கும் கதை முழுக்க முழுக்க மண்வாசனை மற்றும் மழைவாசனையைக் கொண்டிருக்கிறது. சில கதைகள் ‘எப்படா ஊருக்குப் போய்ச் சேருவோம்’ என விடுமுறை நாட்களில் வீடுசெல்லத் தொடங்கும் பயணத்தைப் போல ‘எப்படா கதையின் முடிவு வரும்’ என ஏங்க வைத்துவிடும். பாக்கெட்டில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பேருந்தில் ஏறி ஏதோ ஓர் ஊருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணம் முழுக்க வெளியே சுற்றிப் பார்த்துவிட்டு அப்படியே வீடு திரும்புவது போல் படிக்கப் படிக்க அதன் போக்கிலேயே ரசிக்க வைப்பவை சில கதைகள். ‘என்பிலதனை வெயில் காயும்’ இதில் இரண்டாவது வகை.
கதையின் நாயகன் ஒர் ஏழைக் கல்லூரி மாணவன் சுடலையாண்டி. தாய் தந்தை இல்லாத அவனுக்கு ஒரு தாத்தாவும் பாட்டியும் மட்டுமே அவனுடைய சொந்தங்கள். ஊரிலிருந்து நடந்தே நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருகிறான். வகுப்பில் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பவன். இரண்டாவது இடம் பெரும்பாலும் அவனது ஊரைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்னும் பண்ணைவீட்டுப் பெண்ணுக்குத் தான். சிறப்பாகப் படித்து முதல் வகுப்பில் தேரி வெற்றிகரமாக பி.எஸ்.சி. கணிதம் பட்டம் வாங்கிவிட்டு வேலை தேடுகிறான். இதுவரை தன்னைப் பாடுபட்டுப் படிக்க வைத்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஓய்வு கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை ஆசைதான் அவனுக்கு.
புத்தகம் முழுக்க சுவாரசியங்கள். ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில் இயற்கையாக அமைந்துள்ள எழுத்துநடை புத்தகத்தின் பலம். படிக்கப் படிக்கக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றன.
“ஊரிலேயே நாலைந்து பெண்கள் தான் சிவப்பு” எனப் பெயர்ப்பட்டியல் குறிப்பிடப்படுவதிலிருந்தே தொடங்குறது கதையின் ‘நாயகி’க்கான வழக்கமான நமது தேடல். கதை முழுவதும் சுடலையாண்டியும் ஆவுடையம்மாளும் பேசிக்கொள்பவை சொற்ப வார்த்தைகள் தான். அவளைப் பற்றி இவன் மனதுக்குள் விமர்சித்துக் கொள்வதும் ‘ஒட்டாமல்’ பழகும் விதமும் இருவருக்குள்ளும் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திப் பார்க்க நம்மை அனுமதிப்பதில்லை தான் என்றாலும் இருபத்து மூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் ஆவுடையம்மாளுக்கு ஒரு கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரியும் வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்துவிடும் வேளையில்...
“ஏமாற்றம் அடைந்ததுபோல் சுடலையாண்டிக்கு ஒரு உணர்வு. ஏதோ இழக்கக் கூடாததை இழந்ததுபோல், எதை இழக்கிறோம் என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாமல்...
அதைப் பற்றி எண்ணவே உள்ளம் கலவரப் பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலக்கு மேல் தாண்ட முயன்று, முடியாது தவித்த மனம். இது வேண்டாம். இது சரியில்லை... எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக, துயரமாக, வெறுப்பாக, கசப்பாக...”
என வரும் வார்த்தைகள் ஆவுடையம்மாளின் திருமணத்தை எண்ணி சுடலையாண்டியின் மனது கனப்பதைவிட படிப்பவரின் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றன!
பள்ளிக் காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் ரப்பர், பென்சில் வெட்டும் பிளேடு, கடனாகப் பத்துச் சொட்டு மை, சில்லறை வரைபட உபகரணங்கள்... ஊரில் சடங்கு போன்ற விசேஷங்களில் முண்டியடித்துக் கொண்டு வாங்கப்படும் வெற்றிலை, சீனி, வாழைப்பழம்... சடங்கான பெண் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு மஞ்சள் பூச்சுடனும் மருதாணிச் சிவப்புடனும் மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டுவது போல் வருவது... கணிதப் பேராசியர்களின் “தேர்ஃபோர்”, “ஈஸ் ஈக்வல் டு”, “தோஸ் ஹூ ஆர் ஹோம் ஒர்க் செய்யலே வெளீல போங்கோ...” என்னும் ஆங்கிலச் சொல்லாடல்கள்... எல்லாம் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கின்றன.
“...கல்லூரியில் இருந்து புறப்படும் போதே பொழுது அடைந்து விடும். பிறகு நடை – வாழ் நாளையே நடந்து அளக்க முயல்வது போல்”,
“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்...”
“...தாய் மார்பென்று தடவித் தோல் பாய்ந்த கிழட்டு முலை சுவைத்த காலத்தில் சுரந்த கண்ணீரின் மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன.”
போன்ற இடங்கள் ‘சடன் பிரேக்’.
“...இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி... ....... ........ மக்களாட்சித் தலைவன்கள்”
“...மன்னர்கள் தங்கிய இடங்களில் வௌவால்கள் தலைகீழாய்த் தொங்குகின்றன. மக்களாட்சி வௌவால்கள்”
என்னும் இடங்களில் ‘மக்களாட்சி’ முறையைப் பற்றி அன்று முதல் இன்று வரை நிலவும் சாடுதல்கள் நினைவூட்டப்படுகின்றன.
புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆயினும் வறுமை எனும் கொடுமை மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கிறது. சமூக ஏற்றத் தாழ்வுகளை நினைக்கத் தூண்டிய பல இடங்களில் ‘செவ்வாழை’ கதை நினைவிற்கு வந்து செல்கிறது.
ஓரிரு இடங்களில் ஆசிரியர் படிகமாகக் கூறும் சில விஷயங்கள் புரிகின்ற போது ஒருவித பூரிப்பு! எந்த விஷயமானாலும் ‘அளவோடு’ சொல்வது ஆசிரியரின் சிறப்பு. பொதுவாக வாசிப்பவரின் புரிதலையும் போற்றும் தன்மையையும் பொறுத்துப் படைப்புகளின் தன்மை கூடும் அல்லது குறையும் என்றே தோன்றுகிறது.
சுடலையாண்டியின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்... எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்... அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்... தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்... எல்லாவற்றுக்கும் உட்சபட்சமாக, இறுதியில், உயரிய பதவியில் இருக்கும் தன் தாய்மாமாவிடம் வேலை கேட்டு அது நிராகரிக்கப்படும் போதும் அவரிடம் தன் தாயின் முகச்சாயலைத் தேடும் பரிதாபமும் கதையை வாசிப்பவர் இதயத்தை வலிக்கச் செய்கிறது!
புதுப்புதுப் புத்தகங்கள் எண்ணிலடங்காமல் வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டங்களில் நாம் படிக்காமல் விட்ட இது போன்ற நல்ல பழைய புத்தகங்களைத் தேடிப் படிக்கையில் ‘கால எந்திர’த்தில் பயணித்துப் பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு உணர்வு(nostalgia) ஏற்படுவதை ரசித்துப் பாருங்கள் நண்பர்களே!
- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com/
இந்த அம்மா இன்னும் “L"போர்டு தான், அதனால் பார்த்து பின்னூட்டம் போடுங்க :-)
Posted by IdlyVadai at 7/05/2011 08:12:00 AM 16 comments Links to this post
Labels: சுபத்ரா, புத்தகவிமர்சனம்
Sunday, July 03, 2011
ஒரு பொய்.. தமிழ் சிறுகதை
அன்புள்ள இட்லி வடைக்கு,
தங்கள் பதிவுகளை கடந்த இரண்டு வருடமாக இரசித்து வரும் மக்களில் நானும் ஒருவன். நான் முன்னர் டெல்லியில் பனி புரிந்து வந்தேன். எனது பதிவுகள் ஆங்கிலத்திலே இருந்ததற்கு காரணம் எனக்கு வடகத்திய நண்பர்கள் அதிகம் என்பதால். கடந்த ஒரு வருடமாக நான் சென்னையில் வசித்து வருகிறேன். தமிழ் நண்பர்களுக்காக தமிழில் பதிவுகள் செய்ய ஆசைபடுகிறேன்.... ஒரு தமிழ் சிறுகதை எழுதியுள்ளேன் எனது வலைபதிவில் பதித்துள்ளேன். அதுதான் இட்லி வடையிலும் பதிவு செய்யவேண்டுமென விரும்புகிறேன். தாங்கள் இதை வாசித்து பதிவு செய்ய தகுதியான கதையாய் இருந்தால் பதிவு செய்யவும். என்னுடைய மற்ற சில படைப்புகளை http://selvasword.blogspot.com இங்கே காணலாம்.
இப்படிக்கு இட்லி வடை ருசிக்கும்.
செல்வா
ஒரு பொய்.. தமிழ் சிறுகதை
இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும்.
"ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்.
"அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"... அப்பாவியாய் கேட்ட மகளிடம்... "வாசல் டா கண்ணா"... என்று கூறி புறப்பட்டான்.
விமான பணிப்பெண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனது முன்னால் செல்பவர் வழிவிடும் வரை நின்று பின் தனது இருக்காய் நோக்கி சென்றான். 12 A, B இருக்கையில் அமர்ந்ததும், "ப்ரியா, belt மாட்டிக்கோடா" என்று அவளுக்கு பெல்டை மாட்டிவிட்டான்.
"எப்பபாத்தாலும் ஜன்னல் சீட்ல நீயே உக்கார்ரப்பா.. திரும்ப வரும்போது நான் உக்காருவேன்"... சண்டையிட்ட ப்ரியாவிடம் "சரி டா".. என்று சொல்லி தனது புத்தகத்தை திறந்து படிக்கலானான்.
"கார்த்திக்!"... ப்ரியாவின் குரல் கேட்டு நிமிர்தவனுக்கு அதிர்ச்சி.... நினைத்துக்கூட பார்க்கவில்லை மீண்டும் ப்ரியாவை சந்திப்பான் என்று.... 4 ஆண்டுகள் பின் இன்று விமானத்தில் அவன் இருக்கைக்கு அருகில்.
"அப்பா உனக்கு இந்த ஆண்டியை தெரியுமா?"... ப்ரியா கேட்டாள்.... தெரியும் என தலையசைத்துவிட்டு.... அவளை நோக்கி.... "எப்படி இருக்கீங்க ப்ரியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு, தனது மகளை நோக்கி... "இவங்க பேர்தான் ப்ரியா.. அப்பா உனக்கு கதை சொல்லுவேன் இல்லயா... அந்த ஆண்ட்டி இவங்கதான்".... என்று அவள் காதில் மெல்லியதாய் கூறினான்.
அவள் இருக்கையில் அமர்ந்த பின்னும் நெகிழ்ச்சியில் இருவராலும் எதவும் பேசிக்கொள்ள இயலாததை உணரந்தவளாய் அந்த சிறுமி, ப்ரியாவை நோக்கி... "ஆண்ட்டி, என் பேர் கூட ப்ரியா தான், அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பொய் செல்லவே மாட்டார்"... அவ்வளவு ஸ்மார்டா பேசுகின்ற தன் பெண்ணை பார்த்து ஆச்சர்யத்தில் திளைத்தும் வெளிகொணராமல் புன்னகை உதிர்த்து தனது மகளின் தலை கோதினான்.
சில நிமிட மௌனத்தின் பின், அவளே மௌனத்தை உடைத்தாள்.
"நான் என்ன அவ்ளோ நல்லவளா கார்த்திக்?"... நெகிழ்ச்சியில் அவள் கேட்க்க, இவன் பதில் கூறும் முன், அவனது மகள் முந்திக்கொண்டு "ஆண்ட்டி இந்த dialog விண்ணைத்தாண்டி வருவாயா படத்துலையே கேட்டாங்க.. நீங்க ஒரு changeக்கு, நீங்க என்ன அவ்ளோ நல்லவரா கார்திக்ன்னு கேட்டிருக்கலாமே?"... என்று கூறி சிரித்தாள்.
"நீ ரொம்ப ஸ்மார்ட்டா பேசரடி".. என்று சிறுமியின் தலை தழுவி.... "உங்கம்மா வரலையா?" என்று கேட்டாள்... சிறுமி நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க..."அவங்க already போய்ட்டாங்க.. திரும்பி வரும்போது ஒண்ணா வருவோம்".. என்றான்.
"நான் அவங்களை பார்க்கணுமே கார்த்திக்?".... கேட்டவளிடம் "கண்டிப்பா, ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"... என்று கூறினான்.
"அப்பா நான் bathroom போயிட்டு வர்றேன்"...என்று சொல்லி ப்ரியா அங்கிருந்து அகன்றாள்
"எப்போ adopt பண்ணீங்க கார்த்திக்?"....
"Processing 2 வருஷம் ஆச்சு, இப்போ எங்களோட வந்து 1.5 வருஷம் ஆச்சு"...
மீண்டும் மௌனம் நிலவ.... "நீங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க சந்தோஷமா இருக்கு"... மனதுக்குள் கூரியவளாய்... நீங்க ப்ரியாகிட்ட ஏன் பொய் சொல்றதில்லன்னு கேட்டாள்...
அதெப்படி பெண்கள் மட்டும் தங்கள் எல்லா கேள்விக்கும் விடை தேடுகிறார்கள்?... அதுமட்டுமல்லாது எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டு விடுகிறார்கள்... என்று நினைத்துக்கொண்டே சிறிதாய் ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து மௌனத்தை பதிலாய் தந்தான்.... சில விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட சொல்லாமல் புரியவைக்க கற்றுகொடுத்த குருவே அவள்தான்!.... புரிந்து கொண்டவளாய் மேலும் தொடராமல் "ப்ரியான்னு பேர் வச்சிட்டாலே ஸ்மார்ட் ஆயிடறாங்கல்ல"... என்று கூறி புன்னகைத்தாள்....
டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும், "கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்" "take care டா குட்டி "... என்று சின்ன பெண்ணிடம் கூறிவிட்டு விடைபெற்றாள்.
அவள் சென்றதும் கார்த்திக்கிடம் சிறுமி "அப்பா இதுவரைக்கும் நீங்க ப்ரியாகிட்ட சொன்ன உண்மைகளை விட இன்னிக்கு நீங்க அம்மா இருக்காங்கன்னு சொன்ன பொய் ரொம்ப ரொம்ப உயர்ந்ததுப்பா".... என்று சொல்ல.... அவளை அணைத்து முத்தமிட்டான்.
"அவங்க வீட்டுக்கு வந்தா என்னப்பா பண்றது?".. என்று அறியாமல் கேட்ட சிறுமியிடம்... "அவங்க வரமாட்டாங்க டா".... என்று சொல்லி நடக்கலானான்.
பல கதைகளின் இனிமையை உணர்வதற்கு அதன் கசப்பான முடிவுகளே காரணம்...
Posted by IdlyVadai at 7/03/2011 10:10:00 AM 10 comments Links to this post
Labels: சிறுகதை, விருந்தினர்
Saturday, July 02, 2011
கவிதை வேண்டும்

இந்த வார துக்ளகில் வந்த ஒரு கேள்வி பதில்
கே : தமிழக முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியுள்ள வாலி, அக்கவிதையில் உங்களைச் சாடியுள்ளாரே?
ப : என்னவோ தெரியவில்லை. யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால், முதலில் என்னைத் திட்டி விடுகிறார் வாலி. கலைஞரைப் பாராட்டி கவிதை – அதில் எனக்குத் திட்டு; இப்போது ஜெயலலிதாவைப் புகழ்ந்து கவிதை – அதிலும் எனக்குத்திட்டு!
அவர் யாரையும் புகழாமல் இருந்தால்தான், நான் தப்பிப்பேன் போலிருக்கிறது!
வாலி எழுதிய அந்த இரண்டு கவிதைகளை நான் படிக்க வில்லை, அது எங்கே கிடைக்கும். தயவு செய்து வாலி போல எழுதி 'சோ'திக்காதீர்கள் :-) நன்றி
Posted by IdlyVadai at 7/02/2011 08:37:00 AM 24 comments Links to this post
Labels: கவிதை












