
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
எல்லோருக்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துகள் !
12. வாசகர் விருப்பம்
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, December 30, 2011
2011 டாப் 10+1 படங்கள்
Posted by IdlyVadai at 12/30/2011 11:25:00 AM 31 comments Links to this post
Labels: இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை
Tuesday, December 27, 2011
சசிகலா - சோ பேட்டி
Posted by IdlyVadai at 12/27/2011 06:44:00 AM 12 comments Links to this post
Monday, December 26, 2011
மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் இளையராஜா
இந்த வாரம் நடைபெற இருந்த இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மலபார் கோல்டு ஹவுஸ் என்ற கேரளா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்வதால் சர்ச்சை. சர்ச்சை செய்பவர்கள் பெரியார் திகவினர்.
தமிழர் என்ற உணர்வு தேவைதான். ஆனால் அதுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தின் முதல் வார்த்தை என்ன என்று ஆப்ஷன் A,B,C,D என்று எஸ்.எம்.எஸ் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுவது நல்லது.
இந்த சர்ச்சைக்கு இளையராஜாவின் பதில் "இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லியுள்ளார். அவரின் மனசாட்சி இதை நிச்சயம் சொல்லியிருக்காது.
இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லுவார்கள், ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையினால் இசைக்கு மொழி உண்டு என்று இளையராஜாவே நிருபித்துவிட்டார்.
நாளைக்கே கன்னடர்களிடம் ஏதாவது பிரச்சனை என்றால் பெரியார் திகவினர் என்ன செய்வார்கள் ? பெரியார் கன்னடர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா ?
அச்சமில்லை அச்சமில்லை என்ற தமிழ் கவிஞர் பாரதியார் "கேரள நாட்டிளம் பெண்களுடனே" என்று பாடினார். இன்று கேரளாவை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் இருக்கிறார்கள் என்று பலர் நிருபிக்கிறார்கள்.
பிகு: இளையராஜாவை பற்றி சில வரிகள் இங்கே எடுத்திருக்கிறேன். அவரை விமர்சிக்கும் எண்ணத்தில் பதிவு எழுதவில்லை - இட்லிவடை
Posted by IdlyVadai at 12/26/2011 11:17:00 PM 30 comments Links to this post
Labels: செய்திவிமர்சனம்
ராஜபாட்டை விமர்சனம்
ராஜபாட்டை சில குறிப்புகள்
1. இந்த படத்தின் மூலம் ஒஸ்தி சிம்புவிற்கு தான் சளைத்தவர் இல்லை என்று நிருபித்துள்ளார் விகரம். தமிழ் சினிமா உலகத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
2. 'வாப்பா' என்ற முஸ்லீம் கேரக்டர் 2G பாட்ஷாவை குறிப்பது போல உள்ளது. அப்ப அந்த 'அக்கா' காதாபாத்திரம் யார் ?
3. விக்ரம் படத்தில் ஏன் பெண் வில்லியே வருகிறார்கள் ? விக்ரமுக்கு வயதாகிவிட்டதால் இந்த ஏற்பாடா ? மார்கழி மாதம் வீட்டு வாசலில் கலர் கோலம் போடுவார்கள், இயக்குனர் அதை விக்ரம் தலையில் போட்டுள்ளார்
4. வழக்கமாக தீவிரவாதிகளாக முஸ்லீகளை காட்டி வந்த தமிழ் சினிமா, இதில் மாஃபியா கும்பலாக காட்டியுள்ளது. படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் இதில் வரும் அருவாள் தான்.
5. தசாவதாரம் கமல் போல விகரம் இந்த படத்தில் ஒரு காட்சியிலும், பாடல்களிலும் பல வேஷங்களை போட்டு தன் ஆசயை நிறைவேற்றிக்கொண்டுள்ளார். படம் பார்க்கும் நமக்கே இவர் விக்ரம் என்று தெரியும் போது வில்லனுக்கு தெரியாதது காமெடி !
6. ஸ்ரேயா, ரீமாவுடன் பாடல் எடுத்துவிட்டதால் எங்கே போடுவது என்று குழம்பிய இயக்குனர் கிளைமாக்ஸ் முடிந்த பின் நமக்கு போட்டு காண்பித்துவிட்டார், அதை வீணாக்காமல்.
7. கமலுக்கு நான் தான் நடிப்பு சொல்லித்தந்தேன் என்ற வசனம் பேசிக்கொண்டு கே.விஸ்வநாத் படம் முழுக்க பரிதாமகாக வருகிறார். சினிமாவில் நல்லவர்கள் அனாதை இல்லம் நடத்துவார்கள், இவரும் நடத்துகிறார். வில்லன் இவர் நடத்தும் அனாதை இல்லத்தை அடித்து நொறுக்கும் போது இவரை போலவே நமக்கும் நெஞ்சு வலி வருகிறது, மொக்கை படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்த்தன் விளைவு.
8. வடிவேலு, சந்தானம் காமெடி டிராக் இல்லை, பாவம் விக்ரம் ஓவர் டைம் செய்ய வேண்டியுள்ளது. ஹீரோயின் கடத்தப்படும் காட்சி காமெடி டிராக் இல்லாத இந்த ஒரே காட்சி தீர்க்கிறது.
9. ராஜபாட்டை நம் முகத்தில் போடும் பட்டை !
10. உங்களுடைய சனி சனி பெயர்ச்சி பலன்கள் பொறுத்து ஒஸ்தியா ? ராஜபாட்டையா ? என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் !
Posted by IdlyVadai at 12/26/2011 07:50:00 AM 8 comments Links to this post
Saturday, December 24, 2011
கிருத்துமஸ் வாழ்த்துக்கள் !!
பல்வேறு கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே மக்களவையில் லோக்பால் மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மீடியா வழக்கம் போல இதை ஊதிப் பெரிசாக்கியது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் உள்ளே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்ற டைம் பாம் வைத்து லாலு திரியை கொளுத்த, நன்றாகவே வெடித்தது.
தமிழ் மேட்ரிமோனி டாட் காமில் வருவது போல எல்லோருக்கும் இடஒதுக்கீடு வழங்கிவிடலாம். ஊழல் பெருச்சாளிகளை விசாரிக்க எதற்கு இடஒதுகீடு தேவை? ஊழல் செய்த ராசாவை கலைஞர் தலித் அதனால் தான் எல்லோரும் அவரை டார்க்ட் செய்கிறார்கள் என்று ஜோக் அடித்தார்.
காங்கிரஸ் நாங்களும் ஜோக் அடிக்கிறோம் என்று 50% இடஒதுக்கீடு தேவை என்று சொல்லிவிட்டது. அவர்களுக்கு தேவை இந்த மசோதா நிறைவேறக்கூடாது அதே சமயம் சிறுபான்மையினருக்கு நாங்கள் நண்பேண்டா என்று கூற வேண்டும். ஓட்டு தேவை இல்லையா?
இந்தக் காமெடி பாராளுமன்றத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் போது அன்னா சும்மா இருப்பாரா? காங்கிரஸுக்கு போட்டியாக நானும் காமெடி செய்கிறேன் என்று மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து உண்ணாவிரதம் இருக்கத் தயாராகிவிட்டார். 2G ஊழலுக்கு பின் தான் அன்னா பிறந்தாரா? அதற்கு முன் பீரங்கி ஊழல், லாலு செய்த உர ஊழல், சுடுகாடு ஊழல் எல்லாம் நடந்த போது எங்கே போனார் இவர்? இவர் குழுவில் உள்ள ஒருவர் நீதிமன்றம் போக...
ஒரே ஆறுதல் மும்பை நீதிமன்றம் இவருக்கு எதிராக கூறிய கருத்துக்கள் தான். உங்களுக்கும் (ஜெயமோகன் போன்றவர்களுக்கும்) அது சத்தியாகிரகமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்குத் தொல்லைதான் என்று சொல்லிவிட்டது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அதே நேரத்தில், மசோதா இன்னும் நிறைவேறவில்லை. அதில் என்ன அம்சங்கள் இடம்பெறப் போகிறது என்பதும் யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க எப்படிப் போராட்டம் நடத்தலாம்? உங்கள் போராட்டம் நாடாளுமன்ற நடவடிக்கையில் தலையிடுவதுபோல் இல்லையா? இவர்களுக்கு சேரும் கூட்டதின் பிரதிநிதிகள் தான் பாராளுமன்றத்தில் இதை விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சட்டம் வகுக்க தெரிந்தவர்களுக்கு இது கூட தெரியாதது வெட்கக்கேடு!
அன்னா குழுவினருக்கு கொஞ்சமாவது தலையில் மசாலா இருந்தால் நீதிமன்றம் கூறிய கருத்துக்குத் தலைவணங்கி பாராளுமன்றக் கூட்டம் முடிந்த பின் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது இல்லாததால் அன்னா "சிறையில் உண்ணாவிரதம் இருப்பேன். ஆசாத் மைதானத்தில் ஒரு லட்சம் பேருக்கு இடம் போதாது. எனவே, எம்எம்ஆர்டிஏ மைதானத்துக்கு வேண்டிய கட்டணத்தை செலுத்த, பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்‘‘ என்கிறார். அதுவும் கேஷ் என்றால் வேண்டாம், செக் என்றால் ஓகே என்கிறார்.
இவர் எதற்குக் கூட்டம் சேர்க்க வேண்டும்? மைதானமும், மீடியாவும் இல்லாமல் இவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாதா? மொத்தத்தில், குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலேயும், ரெண்டுமே மகாகாமெடி.
குளிர் அதிகம் என்பதால் ஹசாரேயின் உடல் நலம் காரணமாக தில்லி ராம்லீலா மைதானத்தில் அவரால் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பது கிரன் பேடி சொன்ன தகவல்!
எஸ்.வி.சேகர் திரும்பவும் அம்மா பக்கம் போவாரா, பாராவின் குற்றியலுகரம் புத்தககண்காட்சியில் டிமாண்ட் இல்லாமல் கிடைக்குமா ? ..கொக்கரகோ என்று கூவுவது எல்லாம் சேவலா, சாருவா ? .. பேச ஆயிரதெட்டு சமாசாரம் நமக்கு...... இதில இந்த லோக்பால் வேற. அனைவருக்கும் கிருத்துமஸ் வாழ்த்துக்கள்.
Posted by IdlyVadai at 12/24/2011 09:53:00 PM 8 comments Links to this post
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Monday, December 19, 2011
சென்னை திரைப்பட விழா - A Separation
அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.
இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.
கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட குடும்பமும் கொஞ்ச நாளில் முன்பு போல ஒன்று சேர, குடும்பத்தில் தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறர் ஹீரோயின். இதனால் குடும்பத்தில் உள்ள சின்ன பசங்க கடும் கோபத்தில் இருக்க அதை எல்லாம் கவலை படாமல் ஹீரோயின் தோழியுடன் இருக்க பலர் விமர்சிக்கவும், கிண்டலுக்கும் பயப்படாமல் தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறார். கோவில் கோர்ட் குளம் என்று எங்கே போனாலும் சின்ன பசங்களை விட்டுவிட்டு தோழியுடனேயே போகிறார்.
ஒரு காட்சியில் பிடிவாதத்தைக் காட்டுவதற்கு தோழியின் உறவினரை தன்னுடைய பிள்ளையாகப் பாவித்துத் தத்து எடுக்கிறார். இந்த இடத்தில் இந்த தீடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத போது வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்த திருமணத்தை காட்டியவிதம் பலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஷங்கர் படம் போல பிரமாண்டமாக இந்த திருமணத்தை எடுத்துள்ளார். திருமணத்துக்கு போடப்பட்டிருக்கும் செட் பிரமாதமாக இருக்கிறது - ஆர்ட் டைரக்டருக்கு சபாஷ்!.
விதவிதமான நகை, செருப்பு என்று கம்பியூட்டர் கிராபிக்ஸில் காண்பித்துள்ளார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு சின்ன சண்டை வர சில பல சின்னப் பசங்க எல்லாம் பக்கத்துவீட்டு மஞ்சள் துண்டு தாத்தாவை சப்போர்ட் செய்ய குடும்ப சொத்து அவருக்கு போகிறது. பிறகு அந்த வீடு அலங்கோலமாகிறது. வீட்டை காண்பித்துவிட்டு அப்படியே கூவத்தை காட்டியது பல வசனங்களுக்குச் சமானம்.
சில மாதங்களில் தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க, மீண்டும் சண்டை வர குடும்பத்தில் ஹீரோயின் தலைவர் ஆகிறார். சுபம் என்று போடும் இடத்தில் இயக்குனர் யாரும் எதிர்ப்பாக்காத திருப்பதை வைக்கிறார். ஹீரோயின் தோழியை வீட்டை விட்டு விரட்டுகிறார்
குணசித்திர நடிகராக வரும் நம்பர் ஓபி சில காட்சியிலே வந்தாலும் தன் பார்த்திரம் உணர்ந்து அடக்கமாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. டென்ஷனான வில்லன் போல எப்போதும் நட நட என்று நடக்கும் ராஜனுக்கு சரியான ரோல் கொடுக்காமல் படத்தில் அவரை வீண் செய்துள்ளார்கள்.
வீடியோ கடை வைத்திருப்பது போல ஹீரோயினுடைய தோழியை காண்பித்தது லாஜிக்கில் பெரிய ஓட்டை. இந்த காலத்தில் எல்லோரும் டவுன்லேட் செய்து தான் படம் பார்க்கிறார்கள், அப்படி இருக்க வீடியோ கடை எல்லாம் வைத்திருப்பது என்ன லாஜிக் ?
காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.
பாலிவுட் கிழவர் 6 விக்கெட் எடுத்தால் கோலிவுட் அம்மா 12 விக்கெட்டை எடுக்க முடியும் என்ற வசனத்துக்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் !
இட்லிவடை மார்க் - (-)/(:>)
A separation - விரைவில் கூடல் :-)
Posted by IdlyVadai at 12/19/2011 09:41:00 PM 26 comments Links to this post
அதிரடி செய்தி - சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஜெ

அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 12 பேர் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Posted by IdlyVadai at 12/19/2011 02:06:00 PM 27 comments Links to this post
வடிவேலு சொன்ன குட்டி கதை !
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் பிரச்சினை வந்துள்ளது. எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.
அவர் சொன்ன குட்டி கதை கீழே...
ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், ஐயா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் வருது. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.
அவரோ, ஐயா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.
சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் ஐயா, நான் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம மன உளைச்சலில் அவதிப்படுகிறதால பக்கத்தில் வாராவாரம் நடக்கிற ‘பபுன்’ நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் நுழைவு சீட்டு வாங்கி இருக்கேன். வேணும்னா இன்னிக்கு மனைவியை விட்டு விடுகிறேன். உங்களுக்கு ஒரு சீட்டை தருகிறேன். வாங்க அந்த ‘பபுன்’ பார்த்துட்டு வந்தாலே கவலை எல்லாம் பறந்து போயிடும்னு சொன்னாராம்.
அப்போ இடைமறித்த அவரோ, ஐயா நான் தாங்க அந்த ‘பபுன்’ என்றாராம். மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். அந்த ‘பபுன்’ நிலைதாங்க என்னோட நிலையும் என்றார் வடிவேலு.
பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு :-)
Posted by IdlyVadai at 12/19/2011 12:19:00 PM 9 comments Links to this post
Sunday, December 18, 2011
ஒஸ்தி விமர்சனம்
ரஜினியின் சிவாஜி படத்துக்கு விகடன் 41 மார்க் தந்தது; ஒஸ்திக்கு 40 மார்க். ஒரு மார்க் தானே கம்மி என்று நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன்.
படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே "சிவாஜி தி பாஸ் ஒஸ்தி தி மாஸ்" என்ற வசனம் வர, படம் சூப்பரா இருக்கும் போல என்று பார்த்தால்....
'நான் கண்ணாடி மாதிரிலே' என்று அடிக்கடி வசனம் பேசும் சிம்பு போலீஸ் டிரஸ் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஏன் அதை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை என்ற எண்ணம்தான் முதலில் நமக்கு வந்தது. ஸ்கூல் பசங்க ஃபேன்ஸி டிரஸ் போட்டுக்கொண்டு வந்து "மை நேம் இஸ்... ஐயம் ஏ போலீஸ்' என்று சொல்லும் குழந்தை போல படம் முழுக்க வருகிறார்.
இயக்குநர் தரணி சிம்புவிடம் இது 3D படம் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ படம் முழுக்க கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டே வருகிறார். போலீஸ் டிரஸுடன் சரி மஃப்டியில் வரும் போதும் கூட ஏன் பாட்டு டான்ஸ் ஆடும் போதும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வந்து... படத்தை குறைந்த செலவில் 3D படமாக்கிவிட்டர்கள். சபாஷ்!. கிளாஸுக்கு கீழே விழும் கண்ணீரை ஒரு விரலால் தட்டிவிடுவது ... முடியலடா சாமி.
சரி 'லே' விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்லே. உடனே புரிந்திருக்குமே இது திருநெல்வேலியின் கதை என்று...
திருநெல்வேலி என்றால் உடனே அங்கே இருக்கும் போலீஸும் பொறுக்கி என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவின் படி இவரும் பொறுக்கி போலீஸாக வருகிறார்.
டைட்டில் போது சின்ன வயது அண்ணன் தம்பி சண்டையிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. உடனே நாம் என்ன புரிந்துக்கொள்ள வேண்டும்? டைட்டில் ஆரம்பித்த சின்ன வயது சண்டை டைட்டில் முடியும் போது இவர்கள் பெரிதாகி, சண்டையும் பெரிதாகி, அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி பிறகு அப்பாவோ, அம்மாவோ ஆஸ்பத்திரியில் இருக்க, வில்லன் இவர்களை அடிக்க பழைய உண்மை ஏதாவது வெளியே வர உடனே அண்ணன் தம்பி ஒன்று சேர, இந்தத் தறுதலைகளுக்கு நல்ல, பார்க்க அழகான காதலிகள் அமைய - சுபம்!
முதலில் வில்லன் சோனு எண்டரி. நமக்கு நல்ல அறிமுகமானவர் தான். விஜயகாந்த படத்தில் தீவிரவாதியாகவும், பல தமிழ் படங்களில் சின்ன சின்ன நடிகர்களிடமும் சளைக்காமல் அடிவாங்கியவர். சிம்புவிடம் அடிவாங்குவது ஒன்றும் அவருக்கு பெரிது இல்லை. முதலில் அவரை கொடூர வில்லன் என்று காண்பிக்க ஏதோ ஒரு சிஐடி போலீஸை ஒரே அடியில் வீழ்த்திவிட்டு பணத்தை கூட்டளிகளிடம் கொடுத்து அனுப்புகிறார். சோனுவை இன்னும் ரொம்ப கொடூரமாக காண்பிக்க வேண்டும் என்று தரணி நினைத்திருப்பார் போல. அதனால் அவரையும் திருநெல்வேலி பாஷை பேச வைத்துள்ளார்.
வில்லன் கூட்டளிகள் டாட்டா சுமோவில் சோனு கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு பறக்க, நடுவில் டயர் பஞ்சராகி நிற்க டயரில் ஆணியா என்று பார்க்க 'ஆணி' இல்லை சின்ன புல்லட். உடனே கூட இருக்கும் வில்லன் இது 'ஒஸ்தி வேலன்' தான் என்று முடிவு செய்யும் போது போலீஸ் சைரனுடன் ஒஸ்தி சிம்பு ரோடு எல்லாம் இருந்தும், சுவரை உடைத்துக்கொண்டு டிரைவர் சீட்டிலிருந்து அப்படியே ஓடும் ஜீப்பிலிருந்து வெளியே குதித்து
வண்டி மீது ஏறி உட்காருகிறார் ...ஸ்லோமோஷனில். வேகமாகச் செய்தால் விழுந்துவிடுவார். தலை கூடக் கலையாமல், கண்ணடி மட்டும் லைட்டாக அசைய ஸ்டைலுக்கு அதை ஒத்தை விரலால் சரி செய்கிறார். காலை அனுராதா டின்ஸ் ஆடும் போது எடுத்துப் போடுவாரே அதே போல எடுத்துப் போட்டுவிட்டுக் கீழே இறங்குகிறார். ஹீரோ எண்டரியாம். :-)
ஒரு எடுபிடி வில்லன் அவருக்கு நேராக துப்பாகியைக் காண்பிக்க சிம்பு கவலையேபடாமல் வசனம் பேச ஆரம்பிக்கிறார். அவர் வசனம் பேசி முடித்தவுடன் பார்க்கும் நாமளே டையர்ட் ஆகி இருக்க துப்பாகி வைத்துக்கொண்டு அவர் பக்கம் இருக்கும் எடுபிடி டையர்ட் ஆகாமலா இருப்பார்? அவரும் டையர்ட் ஆன சமயம் பார்த்து சிம்பு அதே துப்பாகியை வைத்து அவரை சுடுகிறார். சுடுவதற்கு முன் .. வேற என்ன வசனம் தான்... "நான் கண்ணாடி மாதிரி என்னைப் பார்த்துச் சிரிச்சா நான் சிரிப்பேன், முறைச்சா முறைப்பேன்... " என்று சொல்லிவிட்டு எடுபடியைச் சுட அவர் இந்த வசனம் கேட்பதிலிருந்து விமோசனம் பெறுகிறார். அவரைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருக்கிறது.
அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடக்கிறது. ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு துப்பாக்கிக் குண்டு வந்து பாய குண்டை பார்த்த சிம்பு லைட்டாக தலையை அசைக்க குண்டு கார் கண்ணாடியை உடைக்கிறது. உடனே சிம்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறார். கண்ணாடியைக் கழட்டுகிறார் கழட்டி இரண்டு மூன்று முறை சுற்றி மேலே போடுகிறார் அது நேராக அவர் காலர் பின்பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறது. அப்போது இரண்டு எடுபிடிகள் சிம்புவை "எப்படி அண்ணாச்சி இவ்வளவு பேரை சத்தமே இல்லாமல் அடித்தீர்கள்?" என்று கேட்க, தரணி நமக்கு படத்தை ரிவைண்ட் செய்து சிம்பு எப்படி பலரை சத்தமே இல்லாமல் அடித்தார் என்று காண்பிக்கிறார். மீதம் இருப்பது இரண்டு பேர்தான். சரி அவர்களை
அடித்துவிட்டு அடுத்த சீனுக்கு போவார்கள் என்று பார்த்தால் உடனே நிறைய டாட்டா சுமோக்கள் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து சிம்புவைச் சூழ, இப்ப என்ன செய்ய போகிறார் என்று நாம் பரிதவிக்க "மாப்பிள்ளைகளா இப்ப நடந்தது குஸ்தி ஃபைட் - இனிமே காட்ட போவது ஒஸ்தி ஃபைட்" என்று அவர்களை அடித்து நொறுக்குகிறார். குரங்கு கூட வெட்கப்படும் அளவிற்குத் தாவுகிறார், குதிக்கிறார், பறக்கிறார்... கடைசியாக எல்லோரையும் அடித்துவிட்டு ஏதோ பஞ்ச் வசனம் பேசுகிறார். அப்போது தரணி என்று தன் பெயரை பெருமையாகப் போட்டுக்கொள்கிறார் டைரக்டர்.
சண்டைக்கு பிறகு காமெடி வரவேண்டுமே என்று நினைக்க உடனே.. சந்தானம், மயில்சாமி குழுவினர் வந்து சேருகிறார்கள். வில்லனுக்கு எடுபிடிகள் ரவுடியாக இருந்தால், ஹீரோவிற்கு எடுபிடிகள் காமெடியன்களாக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபின் படி காமடி பட்டாளம் போலீஸ் ஏட்டாக வருகிறார்கள். (காலெஜ் ஸ்டுடண்ட் என்றால் கூட இருப்பவர்களும் ஸ்டூடன்ஸ் அது மாதிரி).
காமெடிக்குப் பிறகு பாடல் வர வேண்டும்.. அச்சுபிச்சு வசனம் பேசி காமெடி என்று சொல்லிவிட்டு சிம்பு ஜீப்பை விட்டு இறங்கி ஓடுகிறார். போலீஸ் டிரஸை கழட்டி போட்டுவிட்டு டான்ஸ் காஸ்டியூமிற்கு மாறுகிறார். ஆனால் டான்ஸில் கூட கண்ணாடியை மட்டும் கழட்ட மறுக்கிறார்.
இதே மாதிரி கதையை முழுக்க இங்கே சொன்னால் அப்பறம் யாரும் படம் பார்க்கமாட்டாகள். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்று தெரியலை, ஆனால் கடைசியில் ஃபைட் கோபம் வர சிம்புவின் தசைகள் முறுக்கேற அவர் சட்டை அப்படியே கிழிந்து பறக்கிறது. 6 பேக் என்பது பேண்டுக்கு மேல் காமிக்கும் சமாசாரம் அதனால் பேண்ட் அப்படியே இருக்கிறது. சிம்புவும் தமிழ் சினிமாவின் ரீசன்ட் டிரண்ட்படி 6 பேக் காண்பிக்கிறார். 6 பேக் காண்பித்தால் அதுவே கடைசி சண்டை என்ற முடிவுக்கும் நாம் வருகிறோம்.
ரிச்சா படம் முழுக்க தன் இடுப்பையும் முதுகையும் ரிச்சாகக் காட்டிவிட்டுப் போய்விடுகிறார். இந்த எவர்சில்வர் யுகத்திலும் அவர் பானை வியாபாரியாக இருப்பது பாராட்டத்தக்கது.
படத்தில் எல்லோரும் காமெடி செய்துக்கொண்டு இருக்க, நாசர், ரேவதி மட்டும் இந்த படத்தில் எதற்கு நடித்தார்கள் என்று தெரியவில்லை. துளிக்கூட ஒட்டவே இல்லை. படம் முழுக்க எல்லோரும் திருநெல்வேலி பாஷை பேசி காமெடி செய்ய சந்தானம் மட்டும் பேசாமல் காமெடி செய்கிறார்.
இந்தியில் 'டபாங்' என்ற படத்தை தமிழுக்கு கொன்று வந்துள்ளர்கள். படத்தின் பெயரை 'டப்பா' என்று வைத்திருந்தால் இன்னும் ஒஸ்தியாக இருந்திருக்கும்.
சிவாஜி தி பாஸ். ஒஸ்தி தி மாஸ். நல்ல தமாஸ்(லே)
இட்லிவடை மார்க் 2.95/10
தாடி .. கில்லாடி பற்றி விவாதம் இங்கே...
Posted by IdlyVadai at 12/18/2011 02:53:00 PM 26 comments Links to this post
Wednesday, December 14, 2011
முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி, சோ
பலர் முல்லைப் பெரியாறு பற்றி வலைப்பதிவிலும், ட்விட்டரிலும் விவாதிக்கிறார்கள். விவாதிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியுமா என்று கூட தெரியாது. சும்மா ஜெயும் உம்மன்சாண்டிக்கும் நடக்கும் அறிக்கை யுத்ததை வைத்து நடக்கும் விவாதம் என்றே தோன்றுகிறது.
இந்த வார கல்கியில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்களிலிருந்தும், துக்ளக் பத்திரிக்கையிலிரிந்தும் வந்த சில தகவல்கள். பலருக்கு சரியான தகவல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த பதிவு, அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?
‘தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.
இரண்டில் எது உண்மை?
அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.
அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்துப் பராமரித்து வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சித் தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.
அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?
இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை, திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.
ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.
தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?
ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?
“இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறா 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.
இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.
அப்படியானால் என்னதான் தீர்வு?
நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.
தமிழக சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.
தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.
( நன்றி: கல்கி )
துக்ளக் பகுதிகள்
கேள்வி : ‘முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை’ – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?
பதில் : ‘நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல’ என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ‘ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்’ என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.
கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.
கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.
உண்ணாவிரதம் இருக்கும் முன் இந்த தகவல் எல்லாம் குஷ்பு படித்திருப்பாரா ?
Posted by IdlyVadai at 12/14/2011 01:57:00 PM 25 comments Links to this post
Tuesday, December 13, 2011
குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - – ‘டிவி’ வரதராஜன்
அஹமதாபாத்தில் கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எங்கள் குழுவின் இரண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அஹமதாபாத்தில் இருக்கும்போது முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க நானும், எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களும் விரும்பினோம். இ-மெயில் மூலமாகவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம். உடனேயே அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டது! நம்மூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. திருப்புகழ், நரேந்திர மோடியுடன் இருக்கிறார் என்பதால், அவரும் உதவ எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது மிகவும் சுலபமாகி விட்டது. ஒரு முதல்வரை இவ்வளவு எளிதில் சந்திக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
13.11.2011 மதியம் 12 மணிக்கு நாங்கள் மோடி அவர்களைச் சந்தித்தோம். எங்களுடன் ஒரு ஃபோட்டோகிராஃபரையும், வீடியோ கிராஃபரையும் கூட அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்து விட்டார்கள். போகும்பொழுது எங்களுக்கு ஒரு சந்தேகம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபொழுது ‘வணக்கம்’ என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்தபடியே வந்து கொண்டிருந்தார். ‘ஸ்வாகதம்’ என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும், அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
‘எங்களுடைய நாடகங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருகிறார்கள். ஆகவே, தமிழ் நாடகங்களின் விழா ஒன்றை தமிழ்ப் புத்தாண்டு தின சமயத்தில் குஜராத் மாநில அரசின் சார்பாக நடத்த வேண்டும்’ என்று நாங்கள் கேட்டபொழுது, நிச்சயமாக அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உடனே கூறிவிட்டார். தனது சாணக்கியத்தனத்தாலும், சாதுரியத்தாலும், சீரிய தலைமையாலும் அனைவரையும் வென்று வரும் நரேந்திர மோடி அவர்கள், எங்களை அவருடைய ஆத்மார்த்தமான அன்பினால் வென்று விட்டார். மோடியை நாங்கள் சந்தித்தோம் என்று தெரிந்த பிறகு, குஜராத் மாநிலத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஒரு தனி மரியாதை கிட்டியது. நரேந்திர மோடியுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, ‘நீங்கள் வருகிறபோது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?’ என்று கேட்டார், ‘நாங்கள் அப்படி எதுவும் இல்லை’ என்றோம்.
ஆனால் ‘என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அதுதான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்’ என்று அவர் விளக்கினார். நம் ஊரில் கார்ப்பரேஷன் கௌன்ஸிலரைக் கூட இவ்வளவு சுலபமாக, தொந்திரவு இல்லாமல் பார்த்து விட முடியாது என்று எங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டோம்.
ரயில் பயணத்தின்போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதுவரை சாதாரணமாக ஒன்றும் குறிப்பிடத்தக்க நிலையில் இல்லாத கிராமங்களை ரயில் கடந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், குஜராத்தில் நுழைந்தபோதோ, எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமாக விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குஜராத்தில் நாங்கள் கார்களில் பயணம் செய்தபொழுது, அங்கு தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.
அஹமதாபாத்திலும் சரி, சூரத்திலும் சரி, நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம் இனமக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், ‘மோடியினால்தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்’ என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும்; நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.
நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், ‘இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்... நாங்கள் செய்த புண்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்...’ என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.
சூரத் நகரம் புடவைகள் மற்றும் வைரங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடம். அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் புழங்குகின்ற இடம். தினமும் மூட்டை மூட்டையாகத் துணிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக, ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் மற்றும் லாரி நிறுவனங்களுக்கு தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். இது அனேகமாக நாள் முழுவதும் நடக்கிறது. அவ்வளவு வியாபாரம். அந்த மாதிரி மூட்டைகளைச் சுமந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வேறு ஒருவரின் உதவியோடு பேச்சுக் கொடுத்தேன். ‘மூட்டை தூக்குவதால் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்’ என்று கேட்டேன்.
‘சராசரியாக 500 முதல் 700 ரூபாய் வரை வரும்’ என்ற அந்த மூட்டை சுமப்பவர் பதிலளித்தார்.
“எவ்வளவு பணம் வீட்டுக்குச் செல்லும்’ என்று கேட்டேன்.
‘என் செலவுக்கு 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.
‘100 ரூபாய்தானா?’
‘ஆமாம், காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். பகலில் சாப்பிடவும், மற்றும் பான் பராக் போட்டுக் கொள்ளவும் 100 ரூபாய் போதாதா? போதும்’ என்றார்.
‘சரி, குடும்பம் எப்படி இருக்கிறது?’ என்றேன்.
‘மகன் பட்டப்படிப்பும், மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மனைவி ஒரு கடையில் வேலை செய்கிறாள்’ என்றார்.
இது ஒரு சாம்பிள்தான். அனேகமாக குஜராத்தில் பலரும் இதே ஸ்டாண்டர்டில்தான் வாழ்கிறார்கள். அப்புறம் அங்குள்ளவர்கள் விளக்கிச் சொல்லத்தான், இது இங்கே எப்படி சாத்தியமாயிற்று என்பது புரிந்தது. ‘இங்கு பரிபூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆகையால், பணம் பத்திரமாக வீடு செல்கிறது. மதுவிலக்கு இல்லாமல் இருந்தால், இது இவ்வளவு எளிதாக சாத்தியமாகி இருக்காது’ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நம்மூரில் மாலை ஐந்து மணிக்கே கைக்கு வரும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்து தண்ணி அடித்து விட்டு வரும் கணவனை, ‘கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன்’ என்று வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்லும் மனைவிகளுக்கு மத்தியில் – குடும்பத்துடன் வாரக் கடைசியில் ஹோட்டலில் வயிறார சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் குஜராத்தில் இருப்பது, மதுவிலக்கின் மகத்துவத்தைக் காட்டுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம். குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அங்கே அனேகமாக அதிகமாக ஜைனர்கள் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எல்லாமே சைவமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஹமதாபாத் - சென்னைக்கிடையே ஓடும் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அசைவம் சேர்ப்பதே இல்லை. அந்த வண்டியில் பயணம் செய்கிற சூப்பர்வைஸர், ‘காலையில் முட்டை போட்டுச் செய்யப்படும் ஆம்லெட் கூட கிடையாது’ என்று சொன்னார். காரணம், வியாபாரம் ஆகாதாம்.
நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, ‘தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்’ என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பவன் அரசியல்வாதி; அடுத்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன். ஆனால், தன் தாய் திருநாட்டைப் பற்றிச் சிந்திப்பவர் மோடி.
- 'டிவி' வரதராஜன் ( நன்றி: துக்ளக் )
அடுத்த பிரதமர் ?
Posted by IdlyVadai at 12/13/2011 09:41:00 AM 35 comments Links to this post
Monday, December 12, 2011
பிறந்த நாள் வாத்துகள் !!
Posted by IdlyVadai at 12/12/2011 06:34:00 AM 9 comments Links to this post
Labels: வாழ்த்து
Sunday, December 11, 2011
பாரதி யார் ?
Posted by IdlyVadai at 12/11/2011 11:49:00 AM 9 comments Links to this post
Labels: நகைச்சுவை
கிரகணம் விலகியது !
கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - ராமதாஸ் ( நேற்றைய தினம் தந்த பேட்டியிலிருந்து.. )
விட்ட கிரகணம் மீண்டும் பிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள்!
Posted by IdlyVadai at 12/11/2011 05:49:00 AM 3 comments Links to this post
Thursday, December 08, 2011
கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!
Posted by IdlyVadai at 12/08/2011 04:05:00 PM 12 comments Links to this post
Labels: வாழ்த்து
Saturday, December 03, 2011
துருவ நட்சத்திரம் - புத்தக வெளியீட்டு விழா
Posted by IdlyVadai at 12/03/2011 07:34:00 PM 5 comments Links to this post
Labels: அறிவிப்பு, புத்தகம், லலிதா ராம்
சந்திப்பு செய்திகள்
1. கனிமொழியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சந்திக்க செல்கிறார் திமுக தலைவர் கலைஞர்.
2. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று காலை தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.
3. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பா.ம.கவிலிரிந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஆகியோர் சந்திப்பு.
4. சரத்பவார், சரத்யாதவ் இருவரும் எடியூரப்பாவை டெல்லிக்கு வந்து தங்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்றைய பேனர்கள்:

இதை தவிர நில அபகரிப்பு வழக்கில் சட்டத்தை 'சந்திக்க' தயார் என்று பல திமுக முக்கிய புள்ளிகள் சொல்லியுள்ளார்கள்!
Posted by IdlyVadai at 12/03/2011 12:23:00 PM 6 comments Links to this post
Friday, December 02, 2011
அதிமுகவில் வடிவேலு ?
Posted by IdlyVadai at 12/02/2011 07:26:00 PM 8 comments Links to this post
கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !
இந்தியாவில் ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. கிரிக்கெட் வாரியம், ஸ்பான்ஸர்கள் இவை தவிர, ஏதேனும் பெரிய போட்டிகளில் வென்றாலோ அல்லது தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தினாலோ முறியடித்தாலோ, அந்தந்த மாநில அரசு, தவிர மத்திய அரசு என வீர்ர்களை பணக்ரீடை செய்கின்றன.
சமீபத்தில் பம்பாயில் நிகழ்ந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தாரானால் அவருக்கு நூறு தங்கக் காசுகள் வழங்கப்படுமென அகில இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்படி கொட்டும் பண மழை எல்லாம் போதாதென்பது போல சூதாட்டங்களில் வேறு ஈடுபட்டு கிரிக்கெட் வீர்ர்கள் அவ்வப்போது மாட்டிக் கொள்வதும் நிகழ்வதுண்டு. முன்னாள் கேப்டன் அஸாருதீன், நட்சத்திர வீரர் ஜடேஜா போன்றோர்கள் உதாரணம்.
இவை ஒருபுறமிருக்க இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எங்கிருக்கின்றன என பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு தேடினாலும் அகப்படாத அவலநிலை. இன்றைய தலைமுறையினருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரிந்திருக்க நியாயமில்லை, தெரியவில்லை என்று குற்றமும் சொல்ல முடியாது. இதன் கதியே இப்படியென்றால் கால்பந்தாட்டம் எம்மாத்திரம்?
ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஏதேனும் ஒரு கட்சித் தலைவர் ஏதேனும் ஒரு ஜில்லா கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ, அல்லது மாநில கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ தலைமை வகித்துக் கொண்டிருப்பார். எதுவுமே கிடைக்காவிடில், கூடுவாஞ்சேரி கிரிக்கெட் குழுவின் தலைவராகவேனும் பொறுப்பு வகித்துக் கொண்டிருப்பார். ஆனால் கால்பந்து, ஹாக்கி சம்மேளனத்திற்கு ஒரு வார்டு மெம்பர் கூட தலைவர் பொறுப்புக்கு வரத் துணிய மாட்டார். காரணம் அங்கு செல்லாத ஓட்டைக் காலணாவைக் கூடப் பார்க்க முடியாது.
இம்மாதிரியான பணப் பிரச்சனை மற்றும் ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எதுவுமே சோபிக்கவில்லை. 120 கோடி ஜனத்தொகையுள்ள ஒரு நாட்டில் அதிகபட்சம் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தாலே, ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்தியாகின்ற கேவலம். இதையும் விட கேவலமான ஒரு நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கேவலம், அவமானம்! இதற்கும் கீழான வார்த்தைகள் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவ்வணி இந்தியாவுடன் மோதும் நான்காவது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாண்டுகளிக்கு இம்மைதானத்தில் நிகழவிருக்கும் சர்வதேசப் போட்டி என்பதால் மைதானத்தைச் சுத்தம் செய்யும் நிமித்தம், உள்ளூர் டிவிஷன் கால்பந்தாட்ட அணியினரை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதில் என்னவொரு அதிர்ச்சி என்றால், இவ்வணியில் உள்ள சுமார் 7 பேர், மாநில அணி வீரர்களாவர். இதுவெல்லாம் கூட அதிர்ச்சி இல்லை, இனி வரப் போவதுதான் அதிர்ச்சி. சுமார் 26,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில், ஒவ்வொரு இருக்கைக்கும் சுத்தம் செய்ய ரூபாய் 2.75 வீதம் கூலி கொடுக்கப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். ஒரு கப் டீ கூட இந்த விலைக்குக் கிடைக்காத நிலையில், ஒரு கால்பந்தாட்டக் குழுவை, அதிலும் மாநில வீர்ர்களைக் கொண்ட ஒரு குழுவை 2 ரூபாய் சொச்சத்திற்கு கூலியாட்களாக அமர்த்தியிருக்கிறது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம். இது அவ்வணியினரைக் கேவலப் படுத்தும் செயல் அல்ல, ஒட்டு மொத்த கால்பந்தாட்ட்த்தையே கேலிக்குள்ளாக்கும் செயல். இந்தியாவைத் தவிர வேறு எங்குமே நடவாத செயல்.
இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, எங்களுடைய கிழிந்த ஷூக்களுக்குப் பதிலாக புதிய ஷூக்களும், இதர விளையாட்டு சாதனங்களையும் வாங்குவோம் என்கிறார் இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.
இந்தியாவில் கால்பந்தாட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இவ்விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பலம் பொருந்திய அமைப்போ, பணபலமோ நம்மிடம் இல்லை. இதனால் இவ்வாறு செய்யும் வேலைகளின் மூலமாக்க் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எங்கள் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்கிறார் தேஜ் செளஹான் எனும் கால்பந்தாட்ட வீரர்.
மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. அந்த அமைச்சகம் விளையாட்டுக்களை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை; ஒரு விளையாட்டையும், அதன் வீரர்களையும் இவ்வளவு கீழான நிலைக்குத் தள்ளாமலிருக்கவேனும் ஆவன செய்ய வேண்டும்.
சச்சினுக்கு ஒரு வேண்டுகோள்: 100 அடித்த பிறகு ஒரு 100 ரூபாயை கால்பந்தாட்டதுக்கு நிதி உதவியாக தர வேண்டும்.
கசாப் போன்றவர்களை பாதுகாக்க செலவு செய்யும் அரசு அதில் 10% கால்பந்தாட்டத்திற்கு செலவு செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கே விளையட கூடாது. ஞாநி போன்றவர்கள் இதை பற்றி எழுதி சம்பந்தபட்டவர்களுக்கு கொண்டு போக வேண்டும்.
Posted by IdlyVadai at 12/02/2011 10:13:00 AM 6 comments Links to this post
Labels: செய்திவிமர்சனம்
Thursday, December 01, 2011
Mr. & Mrs Idly


திருவானைக்காவல் மெயின்ரோட்டில் Mr. & Mrs Idly என்ற புதிய ஹோட்டல் திறந்திருக்கிறார்கள் என்று சில நாட்கள் முன் ட்விட்டரில் பேசினார்கள். அந்த பிரசித்தி பெற்ற் ஹோட்டல் படம்
அனுப்பிய வடைக்கு நன்றி !
Posted by IdlyVadai at 12/01/2011 05:33:00 PM 10 comments Links to this post
Labels: படம்
















