நல்லாருக்கயா இட்லி?
சோட்டா பீம் கார்டூனில் வரும் ராஜாவை போல தான் நம்ம பிரதமரும். பல பிரச்சனைகள்.ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. ராஜாவுக்காவது சோட்டா பீம் இருக்கிறார். பாவம் மன்மோகன் சிங்கிற்கு யாரும் இல்லை.
மன்மோகன் இந்த நாட்டுக்கு செய்தது எல்லாம் மந்திரிசபை மாற்றம் தான். பசி என்றால் ஐஸ்கிரீம், மினரல் வாட்டர் சாப்பிடும் நடுத்தரவர்க்கம் என்று பேசியதால் பசி மீண்டும் நிதி அமைச்சர். சட்டம் ஒரு இருட்டு அறை என்பதால் வீரப்ப மொய்லி இப்போது மின்சாரத்துரை அமைச்சர். பிரணாப் ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு சம்பிரதாய வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
அமிதாப் ஒலிம்பிக்ஸ் ஜோதியை வைத்துக்கொண்டு போனதை விட சிகப்பு நிற டிரஸ் போட்டுக்கொண்டு போன அந்த பெங்களூர் பெண் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஊழல் பெருச்சாளி கல்மாடி வேடிக்கை பார்க்க ஒலிம்பிக்ஸ் போனதைவிட இந்த சாதாரணப் பெண், வீரர்களுடன் போனதில் தவறில்லை. வெட்கக்கேடு எது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை இப்டி இருக்க, இன்று லண்டன் சென்ற அண்ணன் @elavasam அன்றே சென்றிருந்தால் தமிழ் ட்விட்டர்களின் முக்யப் பிரதிநிதியாக அந்த மார்ச் பாஸ்டில் கலந்து கொண்டிருக்கலாம். அவரிடம் அமெரிக்கா என்று போட்ட ஓவர்கோட் இருப்பதால் இம்புட்டு பிரச்சனையும் வந்திருக்காது.
இலவசம் குடுத்து நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் இந்த புண்ய பூமியில் ஊழல் என்றால் ராஜா, பவர் லெஸ் என்றால் மன்மோகன் சிங், ஜோக்கர் என்றால் ராமதாஸ் என்ற வரிசையில் உண்ணாவிரதம் என்றால் அன்னா அசாரே என்று ஆகிவிட்டது. பேசாமல் அவர் பெயரை அன்னமில்லா அசாரே என்று மாற்றிவிடலாம். இதில் என்ன கூத்து என்றால் மக்கள் வந்தாலும் மீடியாவிற்கு நியூஸ், கூட்டம் வராவிட்டாலும் நியூஸ். பிழைக்க தெரிந்த பிள்ளைகள்.
அமெரிக்காவில் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்க இந்திய சீனப் பொருளாதாரம் பற்றி ரெண்டு மூணு இடங்களில் பேசினார் போல. அங்கே போய் இந்தியப் பொருளாதாரம் பத்தி விஸ்தாரமாப் பேசினா அங்கே இருக்கற தமிழர்கள்/இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு பண்ண வசதியா இருக்கும் என்று பேசினாரோ என்னவோ! ஆனால், அவர் ஜோசியக்காரர் இல்லை என்பதை அங்குள்ள மக்கள் உணர்ந்தே இருப்பார்கள் என்று நம்பறேன்.
மாருதி தொழிற்சாலை பிரச்சனைக்கு வாஸ்து தான் காரணம் என்று இப்போ யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் இடம் மாற்றி இப்போது குஜ்ராத்துக்கு போக போகிறார்கள். மும்பை மாமி கூட தன் தளிகை மும்பையில் சரியாக வராத காரணத்தால் இப்போ குஜராத்துக்குப் போயுள்ளார். அதனால்அடுத்த பிரதமர் கூட குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் அது நல்லது என்றும் நான் நினைக்கிறேன்! மக்கள் தங்கள் கருத்தைக் கண்டிப்பாச் சொல்வார்கள் என்றும் நம்பறேன்.
எடுத்தால் வைக்க முடியாது அது எது? பெரிய விடுகதை என்று நினைக்க வேண்டாம். நம்ம பினாத்தல் சுரேஷ் (@penathal) எழுதின த்ரில்லர் புஸ்தகங்கள் இரண்டு வந்துள்ளன. அதற்கு 'ஸ்டார்' எழுத்தாளர் பா.ராகவன் அட்டைப்படத்தில் முன்னுரை எழுதியுள்ளார். அட்டையில் ஒருவரி விமர்சனம் போடறதும் தமிழுக்குப் புதுசுதான். இருவருக்கும் வாழ்த்துகள்!
செக்ஸ் திரில்லர் எழுத நினைப்பவர்களுகு இந்த நியூஸ் ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார். வேடிக்கை என்னவென்றால் இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிகளும் காட்டுக்குள் பறந்துவிட்டதாக 6வது மனைவி போலீசில் தெரிவித்திருக்கிறார். உல்லாசப் பறவைகள் என்றால் இவர்கள்தான்.
ஏன் சார் சட்டசபைக்கு போகவில்லை என்றால் "கூட்டணியில் இருந்தபோது போனேன். இப்ப கூட்டணியில் இல்லை என்று சொல்லியுள்ளார் கேப்டன். அவர் போக வேண்டிய இடம் கோவில்-கொளம் என்று போவதுதான் சரி. ஏனென்றால் அவர் கடவுளுடன்தான் கூட்டணி வைத்துள்ளார்.
என்றென்றும் அன்புடன்
முனி
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Tuesday, July 31, 2012
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-7-2012
Posted by IdlyVadai at 7/31/2012 10:10:00 PM 8 comments Links to this post
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Thursday, July 26, 2012
கல் மரம்
பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….
அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…
உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…
ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்களை நாம் பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
3000 கோடி வருசத்துக்கு முந்தியது எனும் போது, மரம் மக்கி போகாது என சிந்திப்பவருக்கு, இல்லை.. மக்கி போனால் அதுதான் பெட்ரோல் அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம போச்சுன்னா பிட்டிரைஃபைட்டு ஆகிவிடும். அதனால மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…
யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
திருவக்கரை, இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான். ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.
ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.
இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….
கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….
கல்லால மரம் இருக்கும் திருவக்கரை சென்றால், கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.
அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….
தொட்டு பார்த்த போது, மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.
உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….
யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…
கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….
கேள்வி இருக்கிறது…. பதில் சொல்ல யாருமே இல்லை…. ஹும்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….
நமக்கு தெரிந்தது இந்த தகவல் மாத்திரமே… 18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1. இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2. இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3. இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4. கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5. யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6. 10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.
கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…
எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…
- லாரன்ஸ் பிரபா
சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்! இயற்கையை நேசிப்போம்!!
Posted by IdlyVadai at 7/26/2012 12:58:00 PM 27 comments Links to this post
Labels: கட்டுரை, விருந்தினர்
Tuesday, July 24, 2012
செந்தூர்பாண்டி

இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்...
ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம்.
பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திருக்கிறது. மிக நேர்த்தியாக ஓவியங்கள் வரைகிறார்.
அவரது சில ஓவியங்களை சில அன்பர்கள் வாங்கி அவருக்கு பொருளுதவி செய்திருக்கின்றனர் என்று அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கேமராவில் படம் பிடித்த சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.



அவ்வப்போது, பாண்டிக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறேன். ஆனால், அவராக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. கை தொலைபேசி பழுது பார்ப்பதற்குரிய தகுதி கிடைக்கும் (தமிழக அரசு நடத்திய) இலவச பயிற்சி வகுப்பில் பாண்டி சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார். வீட்டில் இருந்தபடியே சுயவேலை பார்த்து கொஞ்சம் சம்பாதித்து வந்தார். தனது சுய சம்பாத்தியம், கொஞ்சம் கடன் என்று ஒரு சிறு கைதொலைபேசி பழுது பார்க்கும் கடையை தனது வீட்டுக்கு (ரெட் ஹில்ஸ்) அருகில் சமீபத்தில் அமைத்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாண்டிக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பினால், அவரை/என்னை தொடர்பு கொள்ளும்படி இட்லிவடை வாசகர்களை வேண்டுகிறேன்.
M.SENTHUR PANDIAN
NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774
அவரது வங்கிக்கணக்கு எண்:
M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH
- எ.அ.பாலா
பிகு: பணம் அனுப்பும் நண்பர்கள், விவரங்களை (தொகை, தேதி, பெயர்) balaji_ammu@yahoo.com என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.
தன்னம்பிக்கை !
Posted by IdlyVadai at 7/24/2012 10:42:00 AM 3 comments Links to this post
Labels: உதவி
Monday, July 23, 2012
மண்டே மர்மங்கள் (5.1)
இந்த வாரம் சங்கர் மண்டே மர்மங்கள் அனுப்பவில்லை. ஏன் அனுப்பவில்லை என்பது தான் இந்த வார மர்மம் :-)
அடுத்த வாரம் தொடருமா என்பது இன்னொரு மர்மம் !
Posted by IdlyVadai at 7/23/2012 08:30:00 PM 4 comments Links to this post
Friday, July 20, 2012
3Dல் சிவாஜி படம் டிரைலர்
Posted by IdlyVadai at 7/20/2012 02:18:00 PM 12 comments Links to this post
Labels: சினிமா
Wednesday, July 18, 2012
'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி
‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.
1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்ந்து செய்த ‘ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்’ என்கிற கண்டுபிடிப்புதான், செர்ன் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் நுண் அணுவைத் தேடுவதன் துவக்கம். அணுக்களுக்கு உப அணுக்கள் உண்டு என்பதற்கு போஸின் சிந்தனைதான் துவக்கமாக இருந்தது.
அவருடைய பெயரில் ஒரு அங்கமான ‘போஸ்’தான் ஹிக்ஸ்-போசான்’ என்கிற இரட்டைப் பெயரில் இரண்டாவது அங்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுதான் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் பிரம்மாண்டமான முயற்சியாக மாறி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதுதான்: ‘இதுவரை ஹிக்ஸ்-போசான் என்கிற நுண்ணணு இருக்கிறது என்று நினைத்தது சரி என்று தோன்றுகிறது. நாங்கள் கண்டுபிடித்திருப்பது 99.999 சதவிகிதம் அதுதான். இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும், கேள்விகளுக்கும் விடையாக இருக்கும். இதன் மூலம் தெளிவு கிடைக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்த அணுவை ‘கடவுள் அணு’ என்று ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூற, எல்லோரும் அப்படியே இந்த அணுவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும், பாரத நாட்டுக்கும் தொடர்புண்டு. இதை சத்யேந்திரநாத் போஸ் மட்டுமல்ல, செர்ன் விஞ்ஞானிகளின் அமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பாளரான பாவ்லோ குபிலினோ, இந்தக் கண்டுபிடிப்பு வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 2011-ல், ‘பாரத நாடுதான் இந்தக் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் தாய்’ என்று பட்டவர்த்தனமாகக் கூறினார். எங்கோ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் செய்யும் இந்த முயற்சிக்கு, எப்படி பாரதம்தான் தாய் என்று அவர் கூறினார்?
பாரத நாட்டுக்கும், இந்த கடவுள் அணு என்று நம்பப்படும் ‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும் வேறு என்ன தொடர்பு? அந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், 2004-ஆம் ஆண்டு செர்ன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயமான நிகழ்ச்சி பற்றித் தெரிய வேண்டும்.
2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. சரி, செர்ன் ஆராய்ச்சி சாலையில் நடனம் ஆடும் சிவனுக்கும் – அதாவது, நடராஜருக்கும், செர்ன் அமைப்பில் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் என்ன சம்பந்தம்? யாரோ ஒரு சிவ பக்தர் இதைச் செய்தார் என்று நினைக்க வேண்டாம். நமது மதச் சார்பற்ற அரசாங்கம்தான் இந்தச் சிலையை அனுப்பி, அங்கு அமைத்தது. அழகாக இருக்கிறது என்பதற்காக நடனமாடும் நடராஜரின் சிலை அங்கு அனுப்பப்படவில்லை. அப்படி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தின் சிலையை அமைக்க விஞ்ஞானிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.
ஏன், நம் சமயச் சார்பற்ற அரசாங்கம், செர்ன் விஞ்ஞான கூடத்தில் ஹிந்துக்கள் வணங்கும் நடராஜர் சிலையை அமைத்தது? அந்த விஞ்ஞானிகளின் அமைப்பு அதை ஏன் அனுமதித்தது? 1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.
செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.
காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.
பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா. கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
ஹிந்து ஆன்மிகமும் விஞ்ஞானமும், அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை, காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தெய்வத்தின் குரல்’ நூலில் விளக்குகிறார். இந்த விளக்கத்தை அவர் 1960-களில் கொடுத்திருக்க வேண்டும். அணு விஞ்ஞானம், அதுவரை ஜடமாக இருந்த விஞ்ஞானத்தை ஆன்மிகத்துடன் எப்படி இணைத்தது என்பதை, அவர் இப்படி விளக்குகிறார்:
“காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகி இருக்கிறது என்பதை நவீன சையன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலைநாட்டுகிறது. 50 வருஷங்களுக்கு முன், உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப் பொருள்களுக்குள் அடங்குவதாக சையன்ஸ் சொல்லி வந்தது. இந்த (ஜட) மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை (அதாவது ஒன்றுடன் ஒன்று சேராதது) என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின், இந்த மூலப் பொருட்கள் எல்லாமும் கூட வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy)தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சையன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) – இவையும் வேறானவை அல்ல என்று சையன்ஸ் சொல்கிறது.
“ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயன்ஸ் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். பிரம்மம்தான் பரமார்த்திக சத்தியம். உலகம் விவகார (நடைமுறை) சத்தியம் என்று அத்வைதம் சொல்வதைத்தான், இவர்கள் (விஞ்ஞானிகள்) ‘உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல’ என்கிறார்கள்”. (இப்படி உலகம் ‘ஏதோ ஒன்றைச் சார்ந்தது’ என்கிற விஞ்ஞான தத்துவம்தான் ஐன்ஸ்டீனின்relativity theory!
ஆனால் விளைவுகளை வைத்துப் பார்த்தால், விஞ்ஞானத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன? மகா ஸ்வாமிகள், ‘சக்தியும் பொருளும் ஒன்று என்கிற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள், அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து சையன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைத தத்துவம், புத்திமட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. சையன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல், வெளி உலகத்துக்குக் காரணமான உள் உலக உண்மையை ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல் மக்களுடைய பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சையன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணு குண்டைத் தயாரித்த சையன்ஸே ஆத்மஹானிக்குப் பதிலாக, மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்” என்கிறார்கள்.
‘கடவுள் அணு’ கண்டுபிடிப்பு, ஜீவ குலம் எல்லாம் ஒன்று என்கிற ஆன்மிக உண்மையைப் பரப்புமா? அல்லது அணுகுண்டைப் போல் பல மடங்கு நாசத்தை விளைவிக்கும் அனர்த்தத்தைச் செய்யுமா என்பது எதிர்காலத்தில்தான் விளங்கும்.
இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது? அவர் 1974 வரை வாழ்ந்தார். அவர் தன்னுடைய 80-ஆவது வயதில் இறந்தபோது, அவர் யார் என்று கூட நம் நாட்டில் யாருக்கும் தெரியாது. உப அணுக்கள் பற்றி அவருக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசு, என்ரிகோ பெர்மி என்கிற இத்தாலிய நாட்டுக்காரருக்கு கிடைத்தது. 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.
அணு என்றால் என்ன?
அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் ‘கடவுள் அணு’ என்ற ஒன்று இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு சூட்சுமமானது அந்த அணு!
- நன்றி துக்ளக்
இட்லிக்குள் மாவு, சட்னிக்குள் தேங்காய் என்று பல விஷயங்கள் இருக்கு :-)
Posted by IdlyVadai at 7/18/2012 01:12:00 PM 24 comments Links to this post
Tuesday, July 17, 2012
நாட்டு நடப்பு
எச்சரிக்கை : இது வார வாரம் வர வாய்ப்பு இருக்கிறது.
சுரேஷ் கண்ணன் எழுதிய 'பில்லா 2-ம் ஆட்டு மூளைகளும்' என்ற விமர்சனம் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று. இந்த மாதிரி விமர்சனங்களைப் படிக்கவே கோலிவுட் ஆசாமிகள் இந்த மாதிரிப் படங்கள் நிறைய எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அருண் வைத்தியநாதன் இந்த மாதிரி விமர்சனங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்று சர்டிபிக்கேட் கொடுத்துவிட்டார். அவருடைய அடுத்த படம் என்ன என்று யாருக்காவது தெரியுமா ? காதல் ஜோடிகள் நடித்தால் விஜய் டிவி திருமண மண்டபத்தில் திருமணம் ஆக வாய்ப்பு இருக்கிறது.
சுகா எடுக்கும் படித்துறை எப்போது ரிலீஸ்? அதில் டப்பிங் பேசியவருக்கு வயசாகுதில்லையா?
மத அடிப்படைவாதம் என்ற பத்ரி பதிவில் 50+ பின்னூட்டங்கள் இருக்க என்ன என்று பார்க்கப் போனால் அவருடைய பதிவையும் KRS வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸ் சில வாரங்களுக்கு முன் சொக்கனைத் தாக்கியது என்று கேள்விப்பட்டேன். எது எப்படியோ நம்மளைத் தாக்காமல் இருந்தால் சரி.
ஒரு ராட்டன் ஆப்பிளை வைரஸ் தாக்கினால் கூட இருக்கும் ஆப்பிள்களும் கெட்டு போகும். அதே மாதிரி பெங்களூர் பதிவர் சந்திப்பில் ஏதோ ஒரு ஆப்பிள் ராட்டன் என்று நினைக்கிறேன், அங்கே வந்த எல்லா ஆப்பிளும் கெட்டுபோய் உள்ளது. ( கெட்டு போச்சு என்றால் தொலைந்து போச்சு என்று அர்த்தம் )
நான் ஈ – ஞாநி ஒப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு ஞாநியின் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஏன் ஈயை வைத்து அணு உலை விபத்தைப்பற்றி எடுக்க கூடாதா என்று கேட்டுள்ளார். அது சரி. ஞாநி அணு உலை பிரச்சனையை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறார் ?
எல்லா கேள்விக்கும் ஒரு பெரிய கட்டுரை எழுதும் ஜெயமோகன் வாழையும் விஷமும் என்ற பதிவில் வாழைகளுக்கு பூச்சி மருந்து அடிப்பதை பற்றி எழுதியுள்ளார். பேசாம அந்த பூச்சி மருந்துகளை நம் தமிழ் வலைப்பதிவுக்கும், டிவிட்டர் அகவுண்டுக்கும் அடிக்கலாம். நிச்சயம் பத்ரி ஒரு பாட்டிலை வாங்கி அவர் வலைப்பதிவுக்கு அடித்து KRS வைரஸை ஓட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ட்விட்டரில் கொஞ்சநாட்களாக இரவில் சத்தம் கம்மியாகி இருக்கிறது. எல்லாம் மகாபலிபுர மர்மம் என்கின்றனர் அறிந்தவர்கள்.பேசாம இங்கே இரவில் கும்மி அடிக்கும் எல்லோரும் பட்டாபட்டி போட்டுக்கொண்டு மகாபலிபுரத்துக்கு பேரணி போய் விட்டால் சௌக்யமாக இருக்கும். மழை வந்தாலும் பட்டாப் பட்டியைக் காய வைக்க இருக்கவே இருக்கு அழகிய செடிகள்.
என்ன அப்டி உலர்த்தினா அழகிய செடிகள் அழுகிய செடிகள் ஆகிவிடும்.
Posted by IdlyVadai at 7/17/2012 10:52:00 PM 9 comments Links to this post
Labels: நகைச்சுவை, நாட்டு நடப்பு
நோ கமெண்ட்ஸ்
Posted by IdlyVadai at 7/17/2012 09:27:00 PM 4 comments Links to this post
Labels: அரசியல்
Monday, July 16, 2012
மறக்காமல் பாருங்கள்
தனி தமிழ் ஈழம் வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் திமுக அறிவிப்பு செய்தது. பிறகு ஆகஸ்ட் 12-ம் தேதி மாநாடு மாற்றப்பட்டது. விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் தேச விரோதிகளாக கருத படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, டெசோ மாநாட்டில் தனி ஈழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று பல்டி அடித்தார் என்று பத்திரிக்கைகள் சொல்லுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மாலை கலைஞரை சந்தித்துப் பேசினார். கடைசியாக ஆயுதங்கள் தூக்கி வெற்றி பெற முடியாது என்றும், இதில் சிங்கள அரசுதான் ஜெயிக்கும் என்று அன்றே நான் சொன்னேன் என்றும் கூறியுள்ளார்.
சன் டிவியின் வார வரிசையில் இந்த வாரம் கவுண்டமணி - செந்தில் வாரம். அசத்தலான ஐந்து படங்கள் மூலம் தங்களது கோடானுகோடி ரசிகர்களை கலக்க வருகிறார்கள் இந்த காமெடி கலைஞர்கள். உண்மையான தமிழர்களும் எல்லோரும் மறக்காமல் பாருங்கள்.
Posted by IdlyVadai at 7/16/2012 06:57:00 PM 16 comments Links to this post
மண்டே மர்மங்கள் (5) - ச.சங்கர்
நாஸ்கா கோடுகள் (The Nazca Lines )
இன்றைய மர்மமும் தென்னமெரிக்க நாடான பெரு பற்றியதுதான். பெருவின் தலைநகர் லிமாவின் தெற்கே 400 கிமி தொலைவில் உள்ள பாலைவனங்கள் உலகின் மிகவும் வினோதமான குறியீடுகளைக் கொண்டுள்ளது. “ஜியோக்ளைப்” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பூமியின் பரப்பில் கோடுகள் அமைத்தோ செதுக்கியோ அல்லது கற்களை குவித்தோ, பெயர்த்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒருவிதமான படம் அல்லது குறியிடுகளுக்கு ”ஜியோக்ளைப்” என்று பெயர். இதற்குத் தமிழ் வார்த்தை தெரிந்தால்
யாராவது சொல்லுங்கள். எளிதாகப் புரிவதற்காக ஒரு உதாரணத்திற்கு சொன்னால் திருச்சி மலைக் கோட்டை பாறையில் கல்லால் அல்லது ஆணியால் தேய்த்துத் தேய்த்து மிகப் பெரிதாக “ I Love Divya" என்று பொரித்து வைக்கிறார்களே அதுவும் ஒரு விதமான ஜியோக்ளைப்தான் :)
உலகெங்கிலும் நிறைய இடங்களில் ஜியோக்ளைப்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பொதுவாக பாறைகளை சீராக வைத்து அல்லது அகற்றி, குழிகள் தோண்டி அமைக்கப்பட்டவை என்று.இவற்றுள் பெருவில் நாஸ்கா என்ற இடத்தில் ”நாஸ்கா கோடுகள்” என்றழைக்கப்படும் ஜியோக்ளைப்தான் அல்டிமேட் என்று சொன்னால் மிகையில்லை.அந்த நாஸ்கா கோடுகளில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா?ஏதோ ராட்சதர்களால் பூமியில் கிழிக்கப்பட்ட கோடுகள் போல குறுக்கும் நெடுக்குமாக , ஒன்றின் மீது ஒன்றாக என்று ஏகப்பட்ட கோடுகள் சேர்ந்து “நாஸ்கா கோடுகள் “ என்று அழைக்கப் படுகிறது.பல விதமான கணித வடிவங்கள், விலங்குகள்,பறவைகள்,பூக்கள் என்று 15000 க்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
சுமார் 1 அடி ஆழக் கோடுகள். 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்தக் கோடுகள் விரிகின்றன என்றால் அதன் ராட்சதத் தன்மையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.இங்கு வரையப்பட்டுள்ள உருவங்களில் சிலந்தி, நாய், தேன்சிட்டு, குரங்கு,திமிங்கலம்,பெலிக்கன் பறவை என எழுபதிற்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன,எல்லாமே ராட்சத உருவங்கள். இருப்பதிலேயே மிகப் பெரிய பெலிகன் பறவை உருவத்தின் நீளம் 800 அடிக்கும் மேல். உருவங்கள் தவிர காணப்படும் குறுக்கு நெடுக்குக் கோடுகளில் சில, பல கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.
குரங்கு
நாய்
தேன் சிட்டின் உருவம்(Humming Bird)
இந்த இடத்தில் உள்ள மண் மற்றும் கற்கள் இரும்புத்தாது அதிகம் உள்ள மண்ணுடன் கலந்தது.இது தட்பவெப்பத்தால் நாள்பட நாள்பட ஒரு கரு நிறத்திற்கு மாறி விடுகிறது.மேற்புறமுள்ள மண் கல்லை அப்புறப் படுத்தினால் உள்ளே வெளிரிய நிறத்திலுள்ள அடி மண் புலப்படும்.இப்படியாக மேற்பரப்பிலுள்ள மண் கற்களை ஒரு வடிவத்திற்கேற்ப அப்புறப்படுத்தினால் வானத்திலிருந்து பார்க்கும் போது கருப்புத் துணியில் வெளிர் நிறத்தில் வரையப்பட்ட சித்திரம் போல் தோற்றமளிக்கிறது. சொல்லப் போனால் முதலில் ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போதுதான் இந்த நாஸ்கா கோடுகளையும் அதில் புலப்படும் உருவங்களையும் மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள்.இந்தப் பகுதியில் மழையளவு உலகிலேயே மிகக் குறைவு என்பதாலும் பூமியிலுள்ல மண்ணைத் தூற்றி வாரும் அளவுக்கு பெரும் காற்று வீசாததும் இந்தக் கோடுகள் இன்னும் மறையாமல் , அழியாமல், மண்ணில் புதையாமல் கண்ணுக்குப் புலப்படக் காரணம்.
வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டவை, வேற்று கிரக விண்கலங்கள் தரையிரங்க வரையப்பட்ட விமான ஓடுதளம், பாலைவனத்தில் நீர் இருக்கும் இடங்களைச் சுட்டுவதற்காக குறிக்கப் பட்ட வரைபடங்கள், மிகப் பெரிய வானவியல் நாள்காட்டி ,அந்தக் கால நாஸ்காவில் வாழ்ந்த மக்களின் கலாசாரமற்றும் சடங்குகளில் பயன்படுத்தப் பட்டு வந்த உருவங்கள் என ஏகப்பட்ட ஊகங்களும் விளக்கங்களும்.
நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் படி கிமு 200 ஆண்டு முதல் கிபி 700 ஆம் ஆண்டு வரை கலாச்சாரத் தொடர்சியுடன் வரையப்பட்டுள்ள இந்த நாஸ்கா கோடுகள் அந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த நாஸ்கா மக்களின் கலாச்சாரத்துடன் நெருங்கிய
தொடர்பு கொண்டு விளங்கியிருக்கிறது என்பதற்கான சான்றுகள் புலனாகியுள்ளன. இருந்தும் இந்தக் கோடுகளை/ உருவங்களைத் தோற்றுவிக்கத் தேவைப்படும் ஆட்கள் காலம்,மனித உழைப்பு ஆகியவற்றை நினைக்கும் போது ஏதோ வாழ்வு,நம்பிக்கை அல்லது கலாசாரத்தை ஒட்டிய நிகழ்வுக்காக அல்லது அதைக் குறிக்கவே அரும்பாடு பட்டு இந்தக் கோட்டுருவங்களை உருவாக்கியுள்ளனர் என்பது மட்டும் புலனாகிறது. ஆனால் என்ன காரணம் என்பதை வெளிக்காட்டாமல் ஒரு மிகப் பெரிய புதிர் சித்திரம் போல பெருவின் விரிந்து கிடக்கும் நாஸ்கா கோடுகள் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மத்தின் மெளன சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
சிலந்தி உருவம் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்
மர்மங்கள் தொடரும்
அன்புடன்...ச.சங்கர்
கீழே உள்ள படத்தில் என்ன தெரிகிறது ? :-) 
Posted by IdlyVadai at 7/16/2012 06:10:00 PM 4 comments Links to this post
Friday, July 13, 2012
பில்லா - 2 FIR

ஹாலிவுட் தரம் என்று சொல்லும் இன்னொரு கோலிவுட் படம். ஆரம்பம் முதல் ரசிகர்கள் 'தல தல' என்று அவர் கோஷம் போடுவதால் அஜித்துக்கு பித்தம் தலைக்கேறி எல்லோர் தலையையும் வெட்டியும், சில சமயம் சுட்டும் தள்ளுகிறார்.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:
படம் ஆரம்பிக்கும் போது கிடைக்கும் நண்பர் மட்டும் கடைசியில் மிஞ்சுகிறார். மற்றவர்கள் எல்லோரும் மடிகிறார்கள்.
வழக்கம் போல எல்லா தாதாவும் குறுதாடி வைத்துக்கொண்டு முதலில் அஜித் செய்யும் சாகசங்களைப் பாராட்டி பிறகு அவர்களே விரோதியாகி மடிகிறார்கள்.
அவர் அக்கா, அவர் மகள், சகுனி வேலை பார்க்கும் நண்பர்கள், உதவும் நண்பர்கள், போலீஸ், சிம்x2, அவர் மகன் எல்லோரும் கிளோஸ்!
ரகுமான் ஒரு சீனில் வருகிறார். பிறகு எங்கே அடுத்த அடுத்த சீன்களில் வந்தால் செத்துவிடுவேனோ என்று அவரே நினைத்ததாலோ என்னவோ கடைசி வரை வரவே இல்லை.
அடுத்து ஒரு சின்ன கேள்வி பதில்:
நல்ல தாதா கெட்ட தாதா என்ன வித்தியாசம்? படத்தின் ஹீரோ வைரம், போதை மருந்து, ஆயுதம் எல்லாம் கடத்தினால் அவர் நல்ல தாதா. அதே வில்லன் செய்தால் அவன் கெட்ட தாதா.
இதே தான் இங்கே நடக்கிறது. அஜித் நல்ல தாதா. கூட இருப்பவர்கள் எல்லாம் கெட்ட தாதா!
வில்லன் தாதா நல்ல ஃபிகராக வைத்து இருந்தால் அந்த வில்லன் சாக வேண்டும். அப்போது தான் அந்த பிக்கினி குட்டி நீச்சல் அடித்தும், அஜித் உட்காரும் சோபா செட் கைப்பிடியிலும் உட்கார முடியும். இங்கேயும் அப்படியே!
அஜித் ரொம்பப் பேசுவதில்லை. பாதி நேரம் முறைப்பதிலும், நடப்பதிலும் செலவு செய்கிறார். சில சமயம் சின்னச் சின்ன வசனங்களைப் பேசுகிறார் - "நல்லவங்களைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்" என்ற வசனத்துக்கு கைத்தட்டல் வருகிறது. வசனம் இரா.முருகன் மற்றும் முகமது ஜாபர் என்று வலது பக்கம் போடுகிறார்கள். படத்தில் நிறைய பஞ்ச் வராவிட்டாலும், இந்தப் படத்துக்கு தேவையான வசனங்கள் சரியான அளவிலே நன்றாகவே இருக்கிறது. படத்தில் வரும் வசனம் போல "உழைப்பு தான் உயர்த்தும்" என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இசை - யுவன்.
படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதால் முதலில் வைரம், போதை மருந்து, ஆயுதம் என்று அஜித் தாதாவாகிற 'சரித்திரத்தை' காண்பிக்கிறார்கள். ஏன் ஆகிறார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்கள். அவர் இப்படி வளரும்போது அவர் காஸ்டியூமும் கைலி, பேண்ட் சொக்கா (@nchokkan அல்ல), கோட் சூட் என்று மாறுகிறது. கூடவே கூலிங் கிளாசும்! ஆனால் புத்திசாலித்தனம்? நோவே! அப்பப்போ முறைப்பதும், ஸ்லோ மோஷனில் நடப்பதும், கூடவே ஹியர் போன் மாட்டிக்கொண்டு நடக்கும் பாடிகாட் மட்டும் போதுமா அஜித்? இதை நாங்க பாஷாவிலேயே பார்த்துவிட்டோம்.
படம் முடியும் தருவாயில் "நினைச்சதெல்லாம் முடிச்சுட்ட" என்று சொல்லும் போது "இதான் ஆரம்பம்" அஜித் பதில் சொல்லும் போது பகீர் என்று பயம் வந்து நம்மைத் தாக்குகிறது. நல்ல வேளை அப்டி ஒரு விபரீதம் நடக்கவில்லை. நல்ல எடிட்டிங் நன்றி எடிட்டர்சார்.
ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்துக்கு அஜித்தும் அவர் நண்பரும் சென்று பெரிய கன்டைனரை அசால்டாக எடுத்துச் செல்வது,
கடைசியில் தாதா நடத்தும் பெரிய துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அதே இரண்டு மென் ஆர்மியுடன் சென்று நாசம் செய்வது போன்றவை படத்தில் காமெடி சீன்கள்.
படத்தில் இசை, ஒளிப்பதிவு, லொக்கேஷன் கொஞ்சம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இட்லிவடை மார்க் 6/10
அஜித் ரசிகர்கள் நாளைக்கே பார்க்கலாம், காசி தியேட்டரில் கூட்டம் போட்டு டிராபிக் ஜாம் செய்யாமல் கூட்டம் கொஞ்சம் குறைந்த பின் அணில் ரசிகர்களும் பொறுமையாகப் பார்க்கலாம்.
Posted by IdlyVadai at 7/13/2012 10:16:00 PM 16 comments Links to this post
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Thursday, July 12, 2012
எல்லாம் நேரம்
நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.
இந்த கார்ட்டூன் இன்றும் சரியாக இருப்பது ஆச்சரியம். இந்த செய்தி சர்தாஜி ஜோக் இல்லை :-)
Posted by IdlyVadai at 7/12/2012 08:00:00 PM 17 comments Links to this post
Tuesday, July 10, 2012
பாலாஜி எந்த பாலாஜி

சொக்கன் பெயர் மற்றும் அவரது வலைப்பதிவு பெயரும் வந்திருக்கிறது.
அதே மாதிரி கேபிள் சங்கர் .... ஆனால் பாலாஜி பெயர் வந்திருக்கிறது அவர் வலைப்பதிவு பெயர் மட்டும் வரவில்லை.
இதிலிருந்து இட்லிவடை தான் பாலாஜி என்று முடிவுக்கு வராதீர்கள். ஏற்கனவே இவர் வாங்கிய திட்டு போதும் :-)
Posted by IdlyVadai at 7/10/2012 10:33:00 AM 9 comments Links to this post
Labels: மொக்கை
Monday, July 09, 2012
மண்டே மர்மங்கள் (4) - ச.சங்கர்
இன்கா தங்கம் (Inca Gold)
ஆதிகாலத்திலிருந்தே மனிதனுக்கு தங்கம் என்ற உலோகத்தின் மீதிருந்த மோகம் அலாதியானதுதான்.அதுவும் ஸ்பானியர்களுக்கு வெறி என்றே சொல்லலாம். 16 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானியர்கள் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்றதும்,அங்குள்ள பழங்குடியினர் மீது தாக்குதல்கள் நடத்தி வெறியாட்டம் போட்டதும் நாடுகளைப் பிடிப்பதற்காக என்பதை விட, அங்கே அளவுக்கதிகமாகக் கொட்டிக்கிடப்பதாக நம்பிய தங்கத்திற்காகவும்தான்.அப்படி அவர்களால் ஆக்ரமிக்கப் பட்டதுதான் பெரு நாட்டின் இன்கா மக்களும் அதன் அரசும் .ஸ்பானியர்கள் சூறையாடியது போக மிகப் பெரும் பகுதி தங்கம் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்னும் கர்ண பரம்பரைக்கதைதான் இந்த இன்கா தங்கம் பற்றிய மர்ம முடிச்சின் அஸ்திவாரம்.
இன்கா நாகரீகம் பெரு நாட்டின் ஆண்டஸ் மலைப் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சியுற்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் கைப்பற்றப் படும் வரை , இன்கா மக்கள் இந்தப் பகுதியில், மற்றும் சுற்றியிருந்த பல தென்னமெரிக்க நிலப்பரப்புகளையும் ஆட்சி செய்து வந்தனர்.பொதுவாகவே இன்கா மக்களிடம் நிறைய தங்கம் புழக்கத்தில் இருந்ததென்று நம்பப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்கச்சுரங்கங்கள் இரண்டும் இன்கா ஆட்சிக்குட்பட்ட பகுதியிலேயே இருந்ததும் இந்த நம்பிக்கைக்கு வலுச்சேர்பதாய் அமைந்து விட்டது.இப்படி ஏராளமாக இவர்களிடம் இருந்ததாக நம்பப்படும் தங்க பொக்கிஷங்களில் ஹுஅஸ்கர் சங்கிலியும் ஒன்று.கிட்டத்தட்ட 750 அடி நீளமுள்ள கனமான ஒரு சங்கிலி . சங்கிலியின் மேற்புறம் முழுவதும் பாம்பின் செதில்கள் போல தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டது.சுமார் 200 பேர் தூக்கக் கூடிய எடையுள்ளதென்றால் அதன் எடையை அனுமானித்துக் கொள்ளுங்கள். இன்கா மக்களின் வழிபாட்டு வைபவங்களின் போது 200 பேர் இந்தச் சங்கிலியைத் தூக்கிக் கொண்டு நடனமாடுவது ஒரு முக்கிய நிகழ்சியாக இருந்ததாம்.அப்படி ஆடும் போது இந்தச் சங்கிலியில் பதித்துள்ள தங்கச் செதில்களில் சூரிய ஒளி பட்டு கண்கள் கூச அந்தப் பிரதேசமே தங்க ஒளியில் தகதகக்குமாம்.
இந்த சங்கிலியை அதஹூல்பா என்கிற இன்கா மன்னனின் அப்பா தனது மூத்த மகனும் அரச வாரிசுமான ஹுஅஸ்கர் பிறந்ததை முன்னிட்டு செய்ததால் இது ஹுஅஸ்கர் சங்கிலி என்றே அழைக்கப் படுகிறது.
அதஹூல்பா(படம்) ஆட்சிக்கு வரும் போது தன் அண்ணன் ஹுஅஸ்கரைக் கொன்று விட்டான் என்பது தனிக்கதை. இந்த அதஹுல்பா காலத்தில், ஸ்பானியர்கள் ஃப்ரான்ஸிஸ்கோ பிஸரோ என்ற தளபதி தலைமையில் பெரு நட்டில் நுழைந்து கைப்பற்றத் தொடங்கினர்.போரில் அவர்கள் அதஹுல்பாவை சிறைப் பிடித்தவுடன்(படம்) மன்னன் அதஹுல்பா தன் விடுதலைக்காக தருவதாக பேரம் பேசியது என்ன தெரியுமா?
தன்னை சிறை வைத்திருந்த அறையைத் தங்கத்தால் நிரப்புவதாக வாக்களித்தானாம். முதலில் இந்த பேரத்தை பிஸரோ ஏற்றுக் கொண்டான். உடனே நாடெங்கிலுமிருந்து தங்கம் வந்து குவியத்தொடங்கியது.மக்கள் தங்கள் மன்னன் அதஹூல்பாவைக் காப்பாற்ற தங்கத்தை லாமா வண்டிகளில் (நம்மூர் மாட்டு வண்டி மாதிரி அந்த ஊரில் லாமா வண்டி)ஏற்றி அனுப்பத் தொடங்கினர். ஆனால் தங்கம் வரத் தொடங்கிய சிறிது காலத்திலேயே பிஸரோ மனதை மாற்றிக் கொண்டு , அதஹூல்பாவைக் கொலை செய்து விட்டான். அதஹுல்பா கொல்லப்பட்ட செய்தி பரவியதும், இன்கா படை வீரர்கள் தாங்கள் எடுத்து வந்து கொண்டிருந்த தங்கக் குவியல்களை ஆங்காங்கே ஆண்டஸ் மலை ஏரிகளில் எறிந்தும்,மலைக் குகைகளில் மறைத்தும் வைத்து விட்டனர் என்றும் அதில் இந்த ஹுஅஸ்கர் சங்கிலியும் இருந்ததென்றும் கதைகள் உலவுகின்றன.
இது நடந்து 50 வருடங்களுக்குப் பிறகு பெரு நாட்டிற்கு வந்த வால்வோர்ட் என்ற ஸ்பானியருக்கு அவரது பெரு நாட்டு சிவப்பிந்திய மனைவியின் குடும்பம் மூலமாக அந்தத் தங்கத்தின் இருப்பிடம் தெரிந்ததென்றும் அதன் மூலம் வால்வோர்ட் பெரும் பணக்காரனாகி விட்டதோடல்லாமல் அந்தப் புதையலுக்குப் போகும் வழித்தடங்களை விவரமாகக் குறித்து வைத்து விட்டுச் செத்தார் என்று ஒரு தோராயமான வால்வோர்ட் குறிப்பும் கிடைத்தது. போதாதா புதையல் வேட்டை ரசிகர்களுக்கு? இன்கா புதையலைத் தேடி ஆண்டஸ் மலைகளில் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
1850 களில் சற்றே ஓய்ந்த இந்தத் தேடுதல் வேட்டை, ரிச்சார்ட் ஸ்புரூஸ் என்கிற ஆங்கில தாவரவியலாளர் மலேரியா நோய்த் தடுப்பிற்கான கொயினா தயாரிக்கப் பயன்படும் சின்கோனா மரத்தைத் தேடி ஆண்டஸ் காடுகளில் அலைந்த போது தனக்கு வால்வோர்டின் குறிப்பையொட்டி அடனாசியோ குஸ்மான் என்பவர் தயாரித்த வரைபடம் கிடைத்தது என்று
சொன்ன பின்னர் திரும்பவும் சூடு பிடித்தது. இவரது குறிப்பைத் தொடர்ந்து பார்த் ப்ளேக் என்ற புதையல் ஆர்வலர் 1886 ல் புதையலைத் தேடப் புறப்பட்டார்.அவர்தான் புதையலைக் கடைசியாகக் கண்ணால் பார்த்தவர் என்று நம்பப் படுகிறது. அவர் புதையலிலிருந்து கண்டெடுத்ததாக முழுவதும் மரகதக் கற்கள் பதிக்கப் பட்ட தங்கக்குவளை (படம்) பற்றி தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
மேலும் "மிகச்சிறந்த பொற்கொல்லர்களின் கைவண்ணத்தினாலான இன்கா மற்றும் அதற்கு முந்தைய நாகரீக காலத்திற்கான தங்க,வெள்ளி பாத்திரங்களும்,ஆபரணங்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன.இவற்றை என்னால் தனியாக அப்புறப் படுத்த முடியாது " என எழுதி வைத்திருக்கிறார்.முழு அளவில் மனித உருவங்கள்,பறவைகள், மிருகங்கள் ,பூக்கள் என்று அங்கிருந்த பொருட்களைப் பற்றி அவர் குறிப்பெழுதி யிருக்கிறார்.தன்னால் முடிந்த அளவு புதையலை எடுத்துக் கொண்டு கிளப்பியதாக நம்பப்படும் அவர் போன இடமே தெரியவில்லை.நியூயார்க் சென்ற பிறகு போதிய ஆட்களையும் உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு அந்தப் புதையலை எடுக்க வரலாம் என்று கப்பலில் திரும்பும் போது வழியில் கடலில் விழுந்து விட்டார் என்றும், அவரிடம் இருந்த புதையல் பொருட்களுக்காக கடலில் தள்ளி கொல்லப்பட்டார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள். புதையலைத் தேடி, ப்ளேக் போன பாதையைத் தொடர முயன்று ஆண்டஸ் மலைத் தொடரில் நுழைந்த பலரும் உயிரோடு திரும்பவில்லை.
இப்படியாகப் பார்த்தவர்கள் ,பார்க்காதவர்கள்,காதால் கேட்டவர்கள் என்று அத்தனை கதைகளையும் சுமந்து கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது இன்கா தங்கத்தின் மர்மம்.அதஹூல்பா மன்னன் பிடிபட்டதும், காப்பாற்ற நாடெங்கிருந்தும் தங்கம் வந்ததும், எல்லா தங்கமும் வந்து சேரும் முன்னரே அதஹூல்பா கொல்லப்பட்டதும் உண்மை. ஏனெனில் இதெல்லாமே ஸ்பானியர்களால் ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது.ஆனால் அதன் பின் மீதமிருந்த தங்கக் குவியல் என்று ஒன்று உண்டா என்ற மர்மத்திற்கு இன்று வரை விடையில்லை.அப்படியே புதையல் ஆண்டஸ் மலையில் இருந்தாலும் விரிந்து பரந்த ஆண்டஸின், அதுவும் பல முறை நில நடுக்கத்திற்கும் நிலச் சரிவுகளுக்கும் உள்ளானதும்,அடர்ந்த காடுகளை உள்ளடக்கியதுமான லாங்கனேடஸ் மலைத் தொடரில் இன்கா தங்கப் புதையலைத் தேடுவது வைக்கோல் போரின் நடுவில் ஊசியைத் தேடுவதற்கு ஒப்பானது என்றே சொல்லலாம்.
எது எப்படியோ இதை வைத்து நாவலாசிரியர் க்ளைவ் கஸ்லரும் INCA GOLD என்றோர் புதையல் வேட்டை நாவலை எழுதி கல்லா கட்டிவிட்டார்.அவர் எழுதிய அட்வென்சர் நாவல்களில் இது ஒரு விறுவிறுப்பான நாவல் என்று கூடச் சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
பேராசை,படையெடுப்பு,கொலைகள்,மர்மங்கள் என அனைத்தும் அடங்கிய இன்கா தங்கப் புதையல் உண்மையா, இன்னும் ஈகுவெடாரின் பனிப்புகை சூழ்ந்த ஆன்டஸ் மலைக் கூட்டத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறதா,வால்வோர்டின் புதையலுக்கான பாதைக் குறிப்புகள் உண்மையா என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் இன்னும் தொடர்ந்து அனைவரையும் இழுக்கிறது இன்கா தங்கம் என்னும் மாயமான் வேட்டை.
மர்மங்கள் தொடரும்.
அன்புடன் ச.சங்கர்
மஞ்சள் கலரில் இருக்கும் தங்கம் பற்றி இந்த வாரம் நிறைய இருப்பதால் மஞ்சள் கமெண்ட் இந்த வாரம் கிடையாது :-)
Posted by IdlyVadai at 7/09/2012 11:25:00 AM 7 comments Links to this post
Saturday, July 07, 2012
ஆலோசனை கூட்டம் முடிவு
கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். - தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
சதானந்த கவுடாவுக்கு பதில் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகா முதலமைச்சர் - பிஜேபி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
எடியூரப்பாவை தூக்கி விட்டு, கவுடா, அவரை தூக்கி விட்டு இப்போது ஷெட்டர், இவர்கள் காங்கிரஸை தூக்க போகிறார்களாம் :-)
Posted by IdlyVadai at 7/07/2012 06:08:00 PM 8 comments Links to this post
Wednesday, July 04, 2012
கடவுள் செய்தி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது.பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவார். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும்.
உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
துப்பாக்கி குண்டு வைத்த போது, கார்கில் போரும், அதைத் தொடர்ந்து நம் தேசத்துக்கு வெற்றியும் கிடைத்தது. மூன்றாண்டுக்கு முன் எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்தது. தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்தது. தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, "யூரியோபைட்' நோய் தாக்கப்பட்டு, தென்னை மரங்கள் அழிந்தன. நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது.
நடப்பாண்டு ஜன., 13ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் கொண்டு வந்த, ஆற்று நீர் ஒரு சொம்பில் வைக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்தது. பருவமழையும் ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.ஜூலை 2 ல், இக்கோவிலுக்கு வந்த, சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன், பட்டு வேட்டியும், துண்டும் கொண்டு வந்தார். மூலவர் உத்தரவு கிடைத்ததால், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. இதன் மூலம், திருமணம் அதிகமாக நடப்பதுடன், ஜவுளித் தொழிலும், பட்டுத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என, பக்தர்கள் கருதுகின்றனர்.
செய்தியும், படமும் : தினமலர்
இட்லிவடை சிபாரிசு செய்யும் பொருட்கள்:
1. மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடி
2. இந்திய பணம் ( உயரும் என்ற நம்பிக்கை தான் !)
3. அஜ்மல் கசாப் கோப்பு பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் முன் இங்கே வைக்கலாம்
4. சங்மா
5. இந்த இடம் உங்களுக்கு :-)
இந்த கட்டுரை செய்திக்கும் கடவுள் துகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
Posted by IdlyVadai at 7/04/2012 07:43:00 PM 22 comments Links to this post
Tuesday, July 03, 2012
மூமா ஸ்பெஷல் - போட்டி 1
1
2
1, 2 பிட்டில் என்ன என்ன பாட்டு என்று வரிசைப்படுத்தவும் :-)
ட்விட்டரில் ராசா ரசிகன் ரஹ்மான் ரசிகன் என்று அடித்துக்கொள்ளும் அனைவரும் இதில் பங்கு பெறலாம். :-)
Posted by IdlyVadai at 7/03/2012 10:51:00 PM 15 comments Links to this post
Labels: ஒலிப்பதிவு, போட்டி
Monday, July 02, 2012
மண்டே மர்மங்கள் (3) - ச.சங்கர்
கடலுக்குள் “அட்லான்டிஸ்”
அட்லான்டிஸ் என்ற மர்மத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கிரேக்க அறிஞர் ப்ளாட்டோதான்(இவர் தத்துவ மேதை சாக்ரடிஸின் சீடர்).அட்லான்டிஸ் என்பது மிக முன்னேறிய ஒரு தீவு நாகரீகத்தைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை. இதைப் பற்றி ப்ளாட்டோ தன்னுடைய “ தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் ” என்ற உரையாடல் தொகுப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடல்களில் வரும் கதாபாத்திரங்கள் , அட்லான்டிஸ் பற்றியும், அது (ப்ளாட்டோவின் காலத்துக்கு) 9000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூகம்பத்தினாலோ சுனாமியினாலோ அழிந்து விட்டது என்று குறிப்பிடுகின்றன.கதையில் இந்தத் தீவு ஹெர்குலஸ் தூண்களுக்கு வெளியே எங்கோ ( இன்றைய கிப்ரால்டர் ஜலசந்தியில் ) இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது. ப்ளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே.ஆனால் இது பற்றி மனிதர் கொஞ்சம் விலாவாரியாகவே எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.இவர் எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் முன்னதாக சிறந்த சமூக அமைப்புகள் (ideal societies) பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது தைமியஸும் க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். கதை 9000 வருடங்களுக்கு முன்னால் ஏதனியர்களுக்கும் அட்லாண்டியர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள்,போர் பற்றியது.ஏதனியர்கள் மறந்து போன இந்த அட்லாண்டிஸ் பற்றிய வரலாறு சோலோன் (ஏதனியப் பயணி மற்றும் கவிஞர்) என்பவருக்கு எகிப்திய குருமார்களால் சொல்லப்பட்டது. சோலான் இதை ட்ரோபிடஸ் என்ற தன் சொந்தக்காரருக்குச் சொல்லுகிறார். இந்த ட்ரோபிடஸின் மகன் க்ரிடியஸ். இந்தக் க்ரிடியஸின் பேரனின் பேரும் க்ரிடியஸ்தான்(ப்ளாட்டோவின் கொள்ளுத்தாத்தா).இந்தப் பேரன் க்ரிடியஸ்தான் தன் தாத்தா க்ரிடியஸ் தனக்கு அட்லான்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் (சாக்ரடிஸுக்கு) இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி.
தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன.மேலும் பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை.
கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லான்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கோவிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. இதைத் தவிர இங்கு வாழ்ந்த மக்கள், பழக்க வழக்கங்கள், ஆயுதங்கள், உலோகங்கள், சீதோஷண நிலை இப்படி A to Z எல்லாவற்றையும் பற்றி ப்ளாட்டோ விலாவாரியாக எழுதியிருக்கிறார். எவ்வளவு சிறப்பான ஒரு சமூகம் என்றால் உடோபியன் என்ற வார்த்தையே அட்லான்டிஸிலிருந்து மருவி வந்ததாகச் சொல்கிறார்கள்-அவ்வளவு உன்னதமான சமுதாயமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது அட்லாண்டிஸ் ஒவ்வொரு விடயத்திலும்.
கதையாடலைப் பார்த்தால் இப்படியும் ஒரு சமுதாயம் இருந்திருக்குமா என்ற வியப்பும் அது எங்கிருந்தது, ஏன் மறைந்த்து,எப்படி மறைந்தது என்ற தேடல்கள் நூற்றுக்கணக்கான
வருடங்களாக மக்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்து விட்டது.
ஆனால் பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் ப்ளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. கிட்டத்தட்ட நூறு இடங்கள் வரை புராதன அட்லாண்டிஸ் இருந்த இடமாக நம்பப்பட்டு சொல்லப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலவே வல்லுனர்களும் அகழ்வாராய்சியாளர்களும் ஆதாரக் குறிப்புகளுடன் இவையாக இருக்கலாம் என்று சொல்லும் இடங்கள். மற்றவை கிட்டத்தட்ட காலையில் எழுந்தவுடன் ”கனவில்” அட்லான்டிஸ் இருந்த இடம் தெரிந்தது டைப். கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும் தன்மைகள்(continental drift) பற்றி மேலும் பல தெளிவுகள் ஏற்பட்ட 1950 களில் அட்லான்டிஸ்-மறைந்த கண்டம் என்பது தவறானது என்றே கிட்த்தட்ட நிருபணமாகியுள்ளது.
பதினேழாம் நூற்றாண்டின் அறிஞர் அதனாசியஸ் கிர்ச்செர் அட்லாண்டிக் கடல் நடுவில் அட்லாண்டிஸ் என்று சுட்டிக்காட்டி வரைந்த வரைபடம்.
அட்லான்டிசின் புராண கதைச்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து மையல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. தலைச்சன் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார்.அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோவில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோவிலுக்குள் உலவும் அளவு பிரும்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை
இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று வந்த வண்ணம் இருக்கிறது கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் ,இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லான்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பூமியில் இருந்ததா, இல்லை அதீத மனித கற்பனையின் வெளிப்பாடா என்ற புதிர்களை உள்ளடக்கியவாறு இன்னும் இந்த உலகில் மர்மமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது அட்லான்டிஸ் என்னும் மாயாலோகம்.
- ச.சங்கர்
மண்டே மர்மங்கள் தொடரும்....
தமிழ் நாடா இருந்தா நில அபகரிப்பு புகார் போட்டு உள்ளே தள்ளியிருக்கலாம்!
Posted by IdlyVadai at 7/02/2012 11:00:00 AM 10 comments Links to this post











